இடதுசாரி ஆர்வலர்களுக்கு செப்.12 வரை வீட்டுக்காவல் நீட்டிப்பு
மகாராஷ்டிர மாநிலம், பீமா - கோரேகானில் நடந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இடதுசாரி ஆர்வலர்கள் 5 பேரின் வீட்டுக்காவலை, வரும் 12-ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், பீமா - கோரேகானில் நடந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இடதுசாரி ஆர்வலர்கள் 5 பேரின் வீட்டுக்காவலை, வரும் 12-ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை 12-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முன்னதாக, இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மகாரஷ்டிர அரசு சார்பில், கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா ஆஜரானார். இதற்கிடையே, புணே காவல்துறை இணை ஆணையர், நீதிமன்றத்தில் தனக்கு அவமதிப்பு ஏற்படுவதாத் தெரிவித்தார்.
இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்வதை மகாரஷ்டிர அரசு உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், காவல்துறை அதிகாரிகள் பொறுப்புணர்வோடு இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். வழக்கு எங்கள் முன் விசாரணையில் இருக்கிறது. இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றம் தவறிழைக்கிறது என காவல்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை'' என்று குறிப்பிட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக தெலுங்கு எழுத்தாளர் வரவர ராவ், வெர்னோன் கோன்சல்வேஸ், அருண் பெரைரா, சுதா பரத்வாஜ், கெளதம் நவ்லகா ஆகிய 5 இடதுசாரி ஆர்வலர்களை பல்வேறு இடங்களில் வைத்து காவல் துறையினர் கடந்த மாத இறுதியில் கைது செய்திருந்தனர்.
அவர்கள் மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி வரலாற்று ஆய்வாளர் ரோமிளா தாப்பர் உள்ளிட்ட 5 நபர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், வழக்கிற்கு தொடர்பில்லாத 3-ஆம் நபர்கள், குற்ற வழக்கில் தலையிட முடியுமா? என்பது குறித்து ரோமிளா தாப்பர் உள்ளிட்டோர் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வரவர ராவ் உள்ளிட்டோர் அரசுக்கு எதிரான கொள்கையுடையவர்கள் என்பதால்தான் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், வரவர ராவ் உள்ளிட்ட ஐவருக்கும், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பு இருப்பதாலேயே அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் காவல்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.