சபரிமலைக்கு பெண்கள் போகலாம்: ஆதரவாக கருத்துக் கூறிய இயக்குநருக்கு சாணிக்கரைசல் அபிஷேகம்
சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு ஆதரவாக கருத்துக் கூறிய மலையாளத் திரைப்பட இயக்குநர் மீது சாணிக்கரைசல் ஊற்றப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு ஆதரவாக கருத்துக் கூறிய மலையாளத் திரைப்பட இயக்குநர் மீது சாணிக்கரைசல் ஊற்றப்பட்டுள்ளது.
பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் டி.ஆர். பிரியாநந்தன். கடந்த 2006-ம் ஆண்டு இவர் இயக்கிய 'புலிஜென்மம்' படம் தேசிய விருது பெற்றது. அத்துடன் இவர் நெய்துகாரன், சூபி பரஞ்ச கதா, பக்தாஜனங்களுடே ஸ்ரதாக்கு, ஒரு யாத்ரயில், ஜென் நின்னூடு கூடியுண்டு, பதிராக்காலம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது 'சைலன்ஸர்' எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்வதற்கு ஆதரவாக பிரியாநந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில் தொடந்து கருத்துக்களை தெரிவித்து வந்தார். அதற்கு பரவலாக எதிர்ப்பும் கிளம்பி வந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று இயக்குநர் பிரியாநந்தன் மீது மர்ம நபர் ஒருவர் சாணிக்கரைசலை ஊற்றிவிட்டுத் தப்பினார்.
வெள்ளிக்கிழமை காலை திருச்சூரில் உள்ள வலச்சிரா பகுதியில் பிரியாநந்தன் தனது வீட்டைவிட்டு வழக்கம்போல் நடை பயிற்சிக்காக வெளியே வந்தார். அப்போது பிரியாநந்தன் அருகே சென்ற மர்ம நபர் ஒருவர் அவரை திடீரென தாக்கி, அவர் மீது சாணிக் கரைசலை ஊற்றிவிட்டுத்தப்பினார்.
இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து இயக்குநர் பிரியாநந்தனிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் இருப்பார்கள் என சந்தேகிப்பதாகவர் போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரியாநந்தன் மீதான தாக்குதலுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.