கேரளத்தில் அரசு ஊழியர்களுக்கு 6 நாள் ஊதியம் பிடித்தம்: அமைச்சரவை ஒப்புதல்
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராட மாநில அரசு ஊழியர்களின் ஆறு நாள்கள் சம்பளத்தை ஐந்து மாதங்களுக்கு பிடித்தம் செய்யவும்,
திருவனந்தபுரம்: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராட மாநில அரசு ஊழியர்களின் ஆறு நாள்கள் சம்பளத்தை ஐந்து மாதங்களுக்கு பிடித்தம் செய்யவும், பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுக்குத் திருப்பிச் செலுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றுக்கு உலகமே அச்சமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் முதன்முதலில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட மாநிலமான கேரளத்தில், அம்மாநில முதல்வர் பிரனாயி விஜயன் மாநில மக்களை நோய்த்தொற்று பாதிப்பில் காப்பதற்கான பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். ஆனால் நோய்த்தொற்றுக்கு புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் பணிபுரியும் ரூபாய் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களின் 6 நாள்கள் சம்பளத்தை பிடித்தம் செய்ய அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
Advertisement
Advertisement
மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஐந்து மாதங்களுக்கு அரசு ஊழியர்களின் ஆறு நாள்கள் சம்பளம் ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்படும் என அவர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு புதன்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்திலும் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் நிதி நிலைமை சரியான பின்னர் பிடித்தம் செய்யப்பட்ட 6 நாள்கள் சம்பளமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுக்குத் திருப்பிச் செலுத்தப்படும்.
ஓய்வூதியம் பெறுவோர் இதிலிருந்து விலக்கப்படுவார்கள், அதே நேரத்தில் சுகாதார ஊழியர்கள் சம்பளம் பிடித்தம் செய்யும் பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்களா என்பது தெரியவில்லை.
ஏழை எளிய மக்களின் நலன் கருதி இந்த ஆறு நாள் சம்பளத்தை அரசு ஊழியர்கள் விட்டுத் தர வேண்டும் என்றும் பல தனியார் ஊழியர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் வேலையின்றி வருமானமின்றி பசியிலும் பட்டினியிலும் இருப்பதால் அரசு ஊழியர்கள் இந்த 6 நாள்கள் சம்பளத்தை விட்டுத் தர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் தொடர்பாக கேரள அரசு எடுத்துள்ள முடிவுக்கு அரசு ஊழியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.