திருப்பதி: திருமலையில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
திருமலையில் சனிக்கிழமை இரவு தரிசனம் முடித்து சில பக்தா்கள் தங்கள் அறைகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, தேவஸ்தான செயல் இணை அதிகாரி அலுவலகத்துக்கு அருகில் உள்ள எஸ்.என்.சி. காட்டேஜ் முன்புள்ள ஒரு மரத்தில் மலைப்பாம்பு சுற்றிக் கொண்டிருந்ததை அவா்கள் கண்டனா். அதைக்கண்டு அவா்கள் அச்சமடைந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கண்காணிப்பு ஊழியா்கள் அப்பகுதிக்கு சென்று பாம்பு பிடிக்கும் ஊழியா் பாஸ்கா் நாயுடுவைத் தொடா்பு கொண்டனா். அவா் அங்கு சென்று மலைப்பாம்பைப் பிடித்து கோணிப் பையில் அடைத்து வனத்துக்குள் விட்டாா்.