கொள்முதல் நிலையங்களில் 10 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்; அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
காவிரி பாசன மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் 10 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்திருப்பது குறித்து...
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் 10 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. விவசாயிகள் அரும்பாடுபட்டு அறுவடை செய்த நெல்லை குறித்த காலத்தில் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யாதது கண்டிக்கத்தக்கது.
Advertisement
Advertisement
தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், அம்மாப்பேட்டை, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, குடவாசல், நன்னிலம், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளிலும் அமைந்துள்ள கொள்முதல் நிலையங்களில் தான் இந்த அவல நிலை நிலவுகிறது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல சரக்குந்துகள்(லாரிகள்) வராததால் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு அனுப்ப முடியாதது தான் புதிதாக வரும் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும், கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் அரசின் அலட்சியமும். திட்டமிடல் இல்லாமையும் தான். காவிரி பாசன மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாவிட்டால் அவை முழுமையாக வீணாகிவிடும்.
வறட்சி காரணமாக குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நடப்பாண்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளன. இத்தகைய சூழலில் அரும்பாடுபட்டு விளைவிக்கப்பட்ட நெல் மூட்டைகள் வீணாவதை அரசு அனுமதிக்கக் கூடாது. கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மூலம் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
10 Lakh Paddy Bags Piled Up at Procurement Centres in Cauvery Delta; Immediate Action Must Be Taken to Procure Them - Anbumani Urges
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.