இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள் குறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் பேசியது தொடர்பாக...
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்களுக்குத் தேவை நீதியே தவிர, அரசியல் ஆதரவு அல்ல என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று (ஆக. 9) தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆதிவாசி மஹாஉத்சவம் 2026 நிகழ்ச்சியில் முதல்வர் ஹேமந்த் சோரன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
உரிமைகளுக்காக நமது இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நமது அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் அவர்கள் தைரியத்துடன் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். இளைஞர்கள் விரைவில் நீதி பெறுவார்கள். முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் விரைவில் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள்.
Advertisement
Advertisement
மாணவர்களின் இந்த போராட்டத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம். சில அரசியல் கட்சிகள் இளைஞர்களின் போராட்டத்தை தவறாக வழிநடத்தத் தூண்டுகின்றனர். குறிப்பாக இளைஞர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். இளைஞர்களுக்குத் தேவையானது நீதியே தவிர, அரசியல் கட்சிகளின் ஆதரவு அல்ல. உண்மையான தகவல்களுடன் சில பொய்யான தகவல்களையும் இளைஞர்களிடையே பரப்பி சில கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. இது இளைஞர்களின் உண்மையான போராட்டத்தை திசைதிருப்புகிறது.
அரசாங்கத்தின் வலிமையான வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் பின்புலத்தில் இருந்து தவறாக வழிநடத்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டார்.
ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின் சார்பில் 103 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் ஜூலை 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், ஓ.எம்.ஆர். தாள்களில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் புகார் எழுப்பினர்.
இது குறித்து சிஐடி விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் முடிவிலும் முறைகேடுகள் குறித்து எந்தவொரு தகவலும் மாணவர்களுக்கு அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் முண்டா திடலில் ஜூலை 25 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், முறைகேடுகள் குறித்து உரிய முறையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Jharkhand Protest CM Soren says youth need justice, not political patronage; assures transparent action
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.