முகப்பு
இந்தியா

தக்காளி கிலோ ரூ.120; மீன் கிலோ ரூ.80 விற்பனை: மீன் உணவிற்கு மாறிவரும் மக்கள்!

எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் காய்கறி விலையை காட்டிலும் மீன் விலை பாதியாக குறைந்துள்ளதால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் மீன் உணவிற்கு மாறி வருகின்றனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:32 AM
எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் ஒரு கிலோ ரூ. 80 வரையில் விற்பனை செய்யப்படும் மீன்கள்.
பகிர்:

எடப்பாடி:  எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் காய்கறி விலையை காட்டிலும் மீன் விலை பாதியாக குறைந்துள்ளதால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் மீன் உணவிற்கு மாறி வருகின்றனர். 

எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் காய்கறி விலையை காட்டிலும் மீன் விலை பாதியாக குறைந்துள்ளதால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் மீன்களை வாங்கி செல்கின்றனர். 

மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் குழுவினர்

அண்மையில் பெய்த கனமழையால் எடப்பாடி பகுதிகளில் காய்கறி விலைகள் கிடுகிடுவென உயர்வு கண்டது, அதே நேரத்தில் இப்பகுதியில் பாயும் சரபங்கா நதியில் மீன் வளம் அதிகரித்துள்ளதால் மீன் விலை வெகுவாக சரிந்துள்ளது. 

அண்மைக்காலமாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையால் இயங்கி வரும் உழவர் சந்தை, ராஜாஜி பூங்கா காய்கறி மார்க்கெட், நகராட்சி தினசரி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி வரத்து குறைந்த நிலையில், எடப்பாடி பகுதியில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்தது. குறிப்பாக தக்காளி கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரையிலும், முருங்கைக்காய் கிலோ ஒன்று ரூ.150 வரையிலும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், இப்பகுதியில் பாயும் சரபங்கா நதி, கடந்த 20 ஆண்டுகளாக வறண்டு கிடந்த நிலையில் அண்மையில் பெய்த தொடர் கனமழையாலும், சேர்வராயன் மலைத் தொடரில் இருந்து சரபங்கா நதிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்ததாலும், சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதனால் சரபங்கா நதி வடிநில பகுதிகளிலுள்ள வெள்ளாளபுரம் ஏரி, கொண்டயம்பாளையம் ஏரி, எடப்பாடி பெரிய ஏரி உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வழிந்து வருகிறது. இதனால் சரபங்கா நதிகள் அண்மைக்காலமாக மீன் வளம் அதிகரித்துள்ளது.

சரபங்கா நதியில் மீன் வளம் அதிகரித்துள்ள நிலையில், கவுண்டம்பட்டி, ஆவணி பேரூர் கீழ்முகம், போடிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சரபங்கா நதியில் இருந்து அதிக அளவில் மீன்கள் பிடிப்பு பிடிக்கப்பட்டு வருகிறது. 

சுமார் ஒரு கிலோ முதல் 3 கிலோ வரை எடை உள்ள மீன்கள் அதிக அளவில் பிடிபட்டு வரும் நிலையில், இப்பகுதியில் மீன் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 80 வரையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் காய்கறி விலையை காட்டிலும் மீன் விலை பாதியாக குறைந்துள்ளதால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் மீன்களை வாங்கி செல்கின்றனர். இப்பகுதியில் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழுவினர் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.