முகப்பு
இந்தியா

10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம்: அளவுகோலை மறு சீராய்வு செய்யவுள்ள மத்திய அரசு

10 சதவிகித இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு நான்கு வாரங்களை கால அவகாசமாக கேட்டுள்ளது.

Updated On : 25 நவம்பர், 2021 at 4:52 PM
உச்ச நீதிமன்றம்
பகிர்:

மருத்துவ படிப்புகளில் பொருளாரத்தில் நலிவுற்றவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான அளவுகோல்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

அகில இந்திய தொகுப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு நான்கு வாரங்களை கால அவகாசமாக கேட்டது.

பொருளாரத்தில் நலிவுற்றவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "நீட் தேர்வில் அகில இந்திய தொகுப்புகளுக்கான இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படாது" என தெரிவித்தார்.

Advertisement

இதையடுத்து, மத்திய அரசுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

முன்னதாக, பொருளாரத்தில் நலிவுற்றவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான அளவுகோல் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, அளவுகோலை மறு சீராய்வு செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

முன்னதாக இதுதொடர்பாக அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, அளவுகோல் குறித்து கேள்வி எழுப்பி இந்த இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

அப்போது பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், "உங்களிடம் மக்கள்தொகை அல்லது சமூக அல்லது சமூக - பொருளாதார தரவு இருக்க வேண்டும். எட்டு லட்சம் என்ற அளவுகோலை மெல்லிய காற்றிலிருந்து பறித்து நிர்ணயிக்க முடியாது.

நீங்கள் 8 லட்சம் வரம்பை விதித்து சமமற்றவர்களை சமமாக்குகிறீர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களில், 8 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

அரசியலமைப்பின் கீழ், பொருளாரத்தில் நலிவுற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு பெறுபவர்கள் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் அல்ல. இது ஒரு கொள்கை விவகாரம். ஆனால். அதன் அரசியலமைப்புத் தன்மையை தீர்மானிப்பதற்காக கொள்கை முடிவிற்கு வருவதற்கான காரணங்களை அறிய நீதிமன்றத்திற்கு உரிமை உண்டு" என தெரிவித்தார்.

டி.ஒய். சந்திரசூட், சூர்ய காந்த், விக்ரம் நாத் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு, "ஒரு சிறிய நகரத்திலோ அல்லது கிராமத்திலோ வாழும் ஒரு நபரின் சம்பாதிப்பை ஒரு மெட்ரோ நகரத்தில் அதே வருமானம் ஈட்டுபவர்களுடன் எவ்வாறு சமன் செய்ய முடியும்?" என்றும் கேள்வி எழுப்பியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.