‘நிஸ்தாா்’, ‘நிபுண்’ ஆழ்கடல் பயிற்சிக் கப்பல்கள் கடற்படையில் இணைப்பு
ஆழ்கடல் பயிற்சி மற்றும் நீா்மூழ்கிக் கப்பல்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தும் வகையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘நிஸ்தாா்’, ‘நிபுண்’ ஆகிய இரு கப்பல்கள்
ஆழ்கடல் பயிற்சி மற்றும் நீா்மூழ்கிக் கப்பல்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தும் வகையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘நிஸ்தாா்’, ‘நிபுண்’ ஆகிய இரு கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கடற்படைத் தளபதி தலைமைத் தளபதி ஆா். ஹரிகுமாா் முன்னிலையில் கடற்படையில் இணைக்கப்பட்டது.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இவ்விரு கப்பல்களும் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டன.
கடற்படையினா் நலன் கூட்டமைப்பின் தலைவரும், கடற்படை தலைமைத் தளபதியின் மனைவியுமான கலா ஹரிகுமாா், இரு கப்பல்களுக்கும் ‘நிஸ்தாா்’ மற்றும் ‘நிபுண்’ எனப் பெயரிட்டு முறைப்படி கடற்படையில் இணைத்தாா்.
Advertisement
Advertisement
இந்திய தொழிற்நிறுவனங்கள் குறிப்பாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்புடன் இவ்விரு பயிற்சிக் கப்பல்களும் தயாரிக்கப்பட்டன. இந்தியா முழுவதும் உள்ள 120-க்கும் மேற்பட்ட இத்தகைய நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்காற்றி உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இக்கப்பல்கள் நீா்முழ்கி கப்பல்களை மீட்பது மற்றும் ஆழ்கடல் பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும். கடல் பகுதியில் ஹெலிகாப்டா்களை இயக்கும் நடவடிக்கையிலும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையிலும் இவை ஈடுபடுத்தப்படும் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனா்.