முகப்பு
இந்தியா

நசுங்கிய முழங்கையை மீள்உருவாக்கிய எய்ம்ஸ்: அதுவரை காலுடன் தைக்கப்பட்டிருந்த உள்ளங்கை

நாட்டிலேயே முதல் முறையாக, இயந்திரத்தில் சிக்கி நசுங்கிப் போன முழங்கையை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மீள் உருவாக்கம் செய்து சாதனை படைத்துள்ளனர்.

Updated On : 8 ஆகஸ்ட், 2022 at 5:26 PM
தில்லி எய்ம்ஸ் (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:31 PM


புது தில்லி: நாட்டிலேயே முதல் முறையாக, இயந்திரத்தில் சிக்கி நசுங்கிப் போன முழங்கையை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மீள் உருவாக்கம் செய்து சாதனை படைத்துள்ளனர்.

27 வயது இளைஞருக்கு நசுங்கிப் போன முழங்கையை வெட்டி எடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளாக படிப்படியாக பல்வேறு அறுவை சிகிச்சைகள் மூலம் புதிதாக ஒரு கையை மீள்உருவாக்கம் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் சஹரான்பூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காலை 5 மணிக்கு, இயந்திரத்தில் சிக்கி நசுங்கிய கையுடன் வருகிறார்.

Advertisement

ஹைடராலிங் இயந்திரத்தில் சிக்கி அவரது இடது முழங்கை முற்றிலும் சேதமடைந்திருந்தது. முழங்கையின் தோல், தசைகள், நரம்புகள், எலும்புகள் என 5 செ.மீ. தூரத்துக்கு சேதமடைந்திருந்தது. ஆனால் அவரது உள்ளங்கை சேதமடையவில்லை.

அவரது முழங்கை இல்லாமல் அதனுடன் உள்ளங்கையை இணைப்பது என்பது இயலாத காரியம் என்பதையும் இது மிகவும் சிக்கலான முறை என்பதையும் மருத்துவர்கள் உணர்ந்தார்கள்.

இந்த நிலையில் வழக்கமாக செயற்கை கை பொருத்துவார்கள் அல்லது சேதமடைந்த கையை அகற்றிவிட்டு, மீதமிருக்கும் கையுடன் உள்ளங்கையை பொருத்துவார்கள். அப்போதுதான் அவரது முழங்கையை மீள்உருவாக்கம் செய்து அதனுடன் உள்ளங்கையை பொருத்துவது என்று முடிவெடுத்தார்கள்.

அதற்காக அவரது உள்ளங்கையை அகற்றி, அந்த நபரின் இடது காலில் ரத்த ஓட்டம் கிடைக்கும்படி இணைத்துவிட்டனர். இப்போது உள்ளங்கை பத்திரமாக உள்ளது.

பிறகு சேதமடைந்த கையை வெட்டி அகற்றிவிட்டு, முழங்கைக்குத் தேவையான திசுக்கள், நரம்புகள், தோல் போன்றவை கால் மற்றும் தொடைப் பகுதிகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு முழங்கைப் பகுதி உருவாக்கி, பிறகு அதனுடன் காலிலிருந்து வெட்டப்பட்ட உள்ளங்கை நரம்புகளுடன் இணைக்கப்பட்டன.

தற்போது, அவரது கை இயல்பான சில வேலைகளை செய்யத் தொடங்கியிருக்கிறது, எழுதுவது, சிறிய பொருள்களை எடுப்பது போன்றவற்றை இயல்பாக செய்கிறார் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த சிகிச்சை சுமார் 3 ஆண்டு காலமாக படிப்படியாக பல்வேறு அறுவைசிகிச்சைகள் மூலம் நடத்திமுடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.