முகப்பு
இந்தியா

‘மணீஷ் சிசோடியாவையும் விரைவில் கைது செய்வார்கள்’: கேஜரிவால் குற்றச்சாட்டு

தில்லி சுகாதாரத்துறை அமைச்சரை தொடர்ந்து மணீஷ் சிசோடியாவையும் விரைவில் கைது செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

Updated On : 2 ஜூன், 2022 at 11:48 AM
அரவிந்த் கேஜரிவால்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM

தில்லி சுகாதாரத்துறை அமைச்சரை தொடர்ந்து மணீஷ் சிசோடியாவும் விரைவில் கைது செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

பணமோசடி வழக்கில் தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கடந்த திங்கள்கிழமை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து தில்லி முதல்வர் கேஜரிவால் இன்று பேசுகையில்,

பொய் வழக்கில் சத்யேந்திர ஜெயினை மத்திய அரசு கைது செய்யும் என்று சில மாதங்களுக்கு முன்பே நான் கூறினேன். தற்போது நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து கிடைத்த தகவல்படி, மணீஷ் சிசோடியாவும் விரைவில் கைது செய்யப்படுவார். அவர்மீது பொய் வழக்குப்பதிவு செய்யக் கோரி மத்திய அரசின் அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களையும் சிறையில் அடைத்து, அனைத்து மத்திய அமைப்புகளும் ஒரே நேரத்தில் அனைத்து விசாரணைகளையும் மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன். எத்தனை சோதனைகளை வேண்டுமானாலும் செய்யுங்கள். நீங்கள் ஒரு அமைச்சரை கைது செய்வதால், அது பொதுப்பணிக்கு இடையூறாக இருக்கிறது.

இந்த கைது நடவடிக்கைகள் வருகின்ற ஹிமாச்சலப் பிரதேச தேர்தலுக்காக எனக் கூறுகிறார்கள். சிலர், நடந்து முடிந்த பஞ்சாப் தேர்தலுக்கான பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறுகிறார்கள். எதுவாக இருந்தாலும் கைது நடவடிக்கைகளை கண்டு நாங்கள் அச்சமடைய போவதில்லை. கடந்த 5 ஆண்டுகள் பல சோதனைகளை ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர். ஆனால், எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.