தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் மறுப்பு
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் கோரும் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் கோரும் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த மே 30-ஆம் தேதி கைதான சத்யேந்தர் ஜெயினின் அமலாக்கத் துறை காவல் ஜூன் 13-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அவரது காவலை இரு வாரங்களுக்கு நீதிமன்றம் நீட்டித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, ஜாமீன் கோரும் மனு மீது அவரது தரப்பில் மூத்த வழக்குரைஞா் என். ஹரிஹரன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு ஆஜராகி ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்து வாதிட்டார்.
Advertisement
இந்த விவகாரத்தை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல், இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், 2.85 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 133 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
கடந்த ஏப்ரலில் அமலாக்கத் துறை, சத்யேந்தர் ஜெயின் குடும்பம் மற்றும் நிறுவனங்கள் தொடர்புடைய ரூ. 4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது. மேலும், சொத்துகள் முடக்கப்பட்ட உத்தரவில் ஜெயின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். கடந்த 2017, ஆகஸ்ட் மாதத்தில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.