முகப்பு
இந்தியா

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக விரைவில் தீர்மானம்: பஞ்சாப் அரசு அறிவிப்பு

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக விரைவில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். 

Updated On : 29 ஜூன், 2022 at 11:42 AM
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:09 PM

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக விரைவில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். 

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அக்னிபத் திட்டம் நாட்டின் ராணுவத்தை பலவீனமாக்குவதுடன், இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாக எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக விரைவில் தீர்மானம் கொண்டுவரப்படும் என பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில சட்டப்பேரவை பூஜ்ஜிய நேரத்தில்  எழுந்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பகவந்த் மான் இளைஞர்களின் எதிர்காலத்தை நாசம் செய்வதற்காக மத்திய அரசால் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் “பாஜக தலைவர்களைத் தவிர மற்ற யாருக்கும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, வேளாண் சட்டங்கள் போன்றவற்றில் நன்மை இருப்பதாகத் தெரியவில்லை. அதில் தற்போது அக்னிபத் திட்டமும் இணைந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.

மேலும், “தனது இளைய வயதில் நாட்டிற்காக சேவை செய்ய வரும் இளைஞருக்கு ஓய்வூதியம் மறுக்கப்படுவது என்பது துரதிருஷ்டவசமானது. தாய்நாட்டிற்காக உழைக்க வரும் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த அறிவற்ற திட்டத்தை கடுமையாக எதிர்ப்பதுடன் இதற்கு எதிராக மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும்” என பகவந்த மான் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.