பிரதமர் மோடியின் புகைப்படம் ஏன் இல்லை? நிர்மலா சீதாராமன் பாய்ச்சல்
நிர்மலா சீதாராமன், நியாயவிலைக் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் ஏன் வைக்கப்படவில்லை என்று காமாரெட்டி மாவட்ட ஆட்சியரை கடிந்து கொண்டுள்ளார்.
ஹைதராபாத்: தெலங்கானா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நியாயவிலைக் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் ஏன் வைக்கப்படவில்லை என்று காமாரெட்டி மாவட்ட ஆட்சியரை கடிந்து கொண்டுள்ளார்.
தெலங்கானா சென்றிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பயணம் தொடர்பான பல செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கும் நிலையில், நியாயவிலைக் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஏன் இல்லை என்று கேட்டு அவர் கடிந்துகொண்ட சம்பவம் தற்போது செய்தியாகியிருக்கிறது.
நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசிக்கான மானியத்தில், மாநில அரசின் பங்கும், மத்திய அரசின் பங்கும் இருக்கிறது என்பது குறித்து தனக்குத் தெரியாது என்று ஆட்சியர் ஜிதேஷ் பட்டீல் பதிலளித்ததைத் தொடர்ந்து, அடுத்த 30 நிமிடத்தில் நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தாக்கல் செய்யுமாறும் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க.. பொய்யாக பாஜக பகிர்ந்த விடியோ.. பழனிவேல் தியாகராஜன் கிண்டல்
பின்நூர் பகுதியில் பயனாளிகளிடம் பேசிக் கொண்டிருந்த நிர்மலா சீதாராமன், அங்கிருந்த மாவட்ட ஆட்சியரிடம், மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் அரிசிக்கான மானியத்தில் மத்திய அரசு ரூ.29ஐ வழங்குகிறது. மாநில அரசு வெறும் 4 ரூபாய்தான் வழங்குகிறது. அப்படியிருக்கும்போது, ஏன் நியாயவிலைக் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
மானிய பங்கீடு குறித்து தனக்குத் தெரியாது என்று ஆட்சியர் பதிலளித்ததைக் கேட்டு நிர்மலா சீதாராமன் கடும் அதிர்ச்சியடைந்தார். இது குறித்த விவரங்களை 30 நிமிடங்களில் தெரிந்து கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார்.
ஆனால், ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடுவதற்கோ, பிரதமர் மோடியின் புகைப்படத்தைக் கொண்டு வந்து மாட்டுமாறு கூறுவதற்கோ, மத்திய அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்று தெலங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவ் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.