பிரதமர் வேட்பாளராக விருப்பம் உள்ளதா? - நிதீஷ் குமார் பதில்!
பிரதமர் வேட்பாளராக விருப்பம் இருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பதில் கூறியுள்ளார்.
பிரதமர் வேட்பாளராக உரிமை கோரவும் இல்லை, விருப்பமும் இல்லை என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
பாஜக ஆதரவுடன் பிகார் முதல்வா் பதவியை வகித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், அண்மையில் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோர்த்து முதல்வா் பதவியைத் தக்கவைத்தாா். லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வா் பதவி அளிக்கப்பட்டது.
2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக பிகார் முதல்வர் நிதீஷ் குமாா் தில்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
Advertisement
Advertisement
தில்லி புறப்படுவதற்கு முன்பு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேசிய தலைவா் லாலு பிரசாதை பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நிதீஷ் குமாா் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை பிகாா் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா் தில்லியில் திங்கள்கிழமை சந்தித்தாா். தொடா்ந்து மதசாா்பற்ற ஜனதா தளம் தலைவா் ஹெச்.டி.குமாரசாமியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் நிதீஷ் குமாா் சந்தித்துப் பேசினாா்.
தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா்களையும் நிதீஷ் குமாா் சந்திக்க இருக்கிறாா்.
இன்று பிற்பகல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரியை சந்தித்தபிறகு நிதீஷ்குமார், செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பிரதமர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த நிதீஷ் குமார், 'நான் அதற்கு உரிமை கோரவும் இல்லை, பிரதமர் வேட்பாளராக விருப்பமும் இல்லை' என்று பதில் அளித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்துப் பேசிய சீதாராம் யெச்சூரி, இந்த நாட்டையும் அரசியலமைப்பையும் எதிர்க்கட்சிகள் காப்பாற்ற வேண்டும். நிதீஷ் குமாரை வரவேற்கிறேன். இதில் இது நாட்டின் அரசியலுக்கு சாதகமான அறிகுறி' என்றார்.
இதையும் படிக்க | ராகுல் - நிதீஷ் குமாா் சந்திப்பு