முகப்பு
இந்தியா

வரதட்சணை, ஆடம்பர திருமணத்துக்குத் தடா: ஜம்மு-காஷ்மீரில் ஒரு கிராமம்

மகள்களை வைத்திருக்கும் பெற்றோருக்கு ஏற்படும் மன உளைச்சல், ஜம்மு-காஷ்மீரின் இந்தக் கிராம மக்களுக்கு ஏற்படுவதே இல்லை.

Updated On : 21 செப்டம்பர், 2022 at 4:25 PM
வரதட்சணை, ஆடம்பர திருமணத்துக்குத் தடா: ஜம்மு-காஷ்மீரில் ஒரு கிராமம்
பகிர்:

படா வயில்: வரதட்சணைக் கொடுமை பற்றியோ, ஆடம்பர திருமணங்களால் நடக்கும் பிரச்னைகள் பற்றியோ செய்திகள் வெளியாகும்போது மகள்களை வைத்திருக்கும் பெற்றோருக்கு ஏற்படும் மன உளைச்சல், ஜம்மு-காஷ்மீரின் இந்தக் கிராம மக்களுக்கு ஏற்படுவதே இல்லை.

ஜம்மு-காஷ்மீரின் கந்தெர்பால் மாவட்டத்தில் உள்ளது பாபா வயில் என்ற கிராமம். மிகச் சிறிய கிராமமாக இருந்தாலும், மிகப்பெரிய நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் பல நல்ல விஷயங்கள் இங்கு உள்ளன.

கடந்த 40 ஆண்டுகளாக, இந்த கிராமத்து மக்கள் வரதட்சணை மற்றும் ஆடம்பர திருமணத்துக்கு விதிக்கப்பட்ட தடையைப் பின்பற்றி வருகிறார்கள். கிராம மக்களின் நலன் கருதி, 1980ஆம் ஆண்டுகளில், கிராமப் பெரியவர்கள் வரதட்சணைக்கு எதிராக முடிவு எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஆவணங்களில், இமாம், கிராமத் தலைவர்கள், முக்கிய நபர்களும் கையெழுத்திட்டுள்ளனர். அந்த ஆவணங்கள், அந்தக் கிராமத்தின் மிக முக்கிய மசூதியில் பத்திரமாக வைக்ப்பட்டுள்ளது. அன்றைய நாள் முதல், அந்தக் கிராமத்தில் எந்த வரதட்சணைப் பிரச்னையும் எழவில்லை என்கிறார் ஹாஜி குலாம் நபி ஷா (70).

எவ்வளவுப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் சரி, மற்ற அனைவரையும் போல எளிமையான முறையிலேயே திருமணத்தை நடத்துகிறார்கள். பெண் வீட்டாரிடம் வரதட்சணைப் பற்றி பேசுவதே இல்லையாம்.

இவ்வாறு தடையை மீறும் குடும்பத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்று அந்த ஆவணத்தில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அண்டை கிராமங்களும் இந்த முறையைப் பின்பற்ற தீர்மானித்து, சில கிராமங்களில் செயல்படுத்தியும் வருகிறார்களாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.