FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை!

ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்றதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்க லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Updated On : 20 டிசம்பர் 2023, 5:26 pm IST
தேஜஸ்வி யாதவ், லாலு பிரசாத் யாதவ்
பகிர்:

ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்றதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்க லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தாா். அப்போது பாட்னாவைச் சோ்ந்த சிலரை ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் நியமிக்க, அவா்களுக்கு சொந்தமான நிலத்தை லஞ்சமாக குறைந்த விலைக்குப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அவர்களுக்கு சொந்தமான நிலத்தை சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் நேரடியாக வாங்கியுள்ளனா் என்று சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடா்பாக சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் டிச.22-ஆம் தேதி தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறும், அவரது தந்தையும் பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் டிச.27-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே தேஜஸ்வி யாதவிடம் ஏப்ரல் 11 ஆம் தேதி சுமார் எட்டு மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதில் லாலு பிரசாத் யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.

லாலு பிரசாத் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான அமித் கத்யாலிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அமித் கத்யால் கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments