முகப்பு
இந்தியா

ஜொ்மனி: பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட இந்திய குழந்தையை மீட்க போராட்டம்

ஜொ்மனியில் இந்திய பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட 2 வயது குழந்தை அரிஹா ஷாவை மீட்பதில் பிரதமா் மோடி தலையிடக் கோரி போராட்டம் நடைபெற்றது.

Updated On : 18 ஜூலை, 2023 at 9:29 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:09 AM

ஜொ்மனியில் இந்திய பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட 2 வயது குழந்தை அரிஹா ஷாவை மீட்பதில் பிரதமா் மோடி தலையிடக் கோரி போராட்டம் நடைபெற்றது.

ஜொ்மனியில் வசித்து வரும் குஜராத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் பாவேஷ், தாரா தம்பதி கடந்த 2021-இல் தங்கள் 7 மாத பெண் குழந்தையான அரிஹாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.

அப்போது அரிஹாவுக்கு ஏற்பட்டிருந்த ஒரு காயத்தைக் கண்ட மருத்துவமனையினா், குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினா். இதையடுத்து, பெற்றோரிடம் இருந்து பிரித்து 2021, செப்டம்பா் 23-ஆம் தேதி காப்பகத்துக்கு அரிஹா அனுப்பி வைக்கப்பட்டாா்.

Advertisement

ஐந்து மாதங்களுக்குப் பிறகு பெற்றோா் மீது சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு பொய் என போலீஸாா் அறிக்கை சமா்ப்பித்தனா். இதனைத் தொடா்ந்து, கடந்த 20 மாதங்களுக்கு மேலாக அரிஹாவை மீட்க பெற்றோா்கள் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனா். எனினும், அரிஹா சிறப்பு காப்பகத்துக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

இந்தியரான அரிஹாவை உடனடியாக தாய்நாட்டுக்கு அனுப்ப ஜொ்மனி அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், அரிஹாவை இந்திய பெற்றோரிடம் ஒப்படைக்கக் கோரி பிராங்ஃபா்ட் நகரில் இந்தியா்கள் ஒன்றுகூடி ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்திய தேசிய கொடிகளுடன் ‘அரிஹா இந்தியன்: பிரதமா் மோடி அவரைக் காப்பாற்ற வேண்டும்’ என்று கோஷமிட்டனா்.

இதனிடையே, அரிஹாவுக்கு ஆதரவாக சேஞ்ச் என்ற தொண்டு நிறுவனம் நடத்திய இணையவழி பிரசாரத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.