முகப்பு
இந்தியா

900 கி.மீ. தொலைவில்.. இரட்டையர்களுக்கு ஒரே நேரத்தில் ஒன்று போல வந்த மரணம்

இரட்டைச் சகோதரர்கள் 900 கி.மீ. தொலைவில் இருந்த போதும், ஒரே நேரத்தில் ஒன்று போல மரணத்தைத் தழுவியிருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:43 PM
கோப்புப்படம்
பகிர்:


ஜெய்சல்மேர்: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது இரட்டைச் சகோதரர்கள் 900 கி.மீ. தொலைவில் வேறு வேறு மாநிலத்தில் இருந்த போதும், ஒரே நேரத்தில் ஒன்று போல மரணத்தைத் தழுவியிருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

ஒருவர், வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து பலியாக, ஒரு மணி நேரத்துக்குள் மற்றொருவர் கால் தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியாகியிருப்பதாக குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இரட்டைச் சகோதரர்களான சுமேர், சோஹன் சிங் உடல்களுக்கு சொந்த ஊரில் வியாழக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெற்றுள்ளன. ஒன்றாக உருவாகி, ஒன்றாகப் பிறந்து, 26 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து, எங்கேங்கோ வசித்து வந்த போதும், ஒன்றாக ஒரே நேரத்தில் மரணத்தை தழுவியதும், இருவரின் உடல்களுக்கும் ஒன்றாக இறுதிச் சடங்கு நடத்தி முடிக்கப்பட்டதும், அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி கலந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், சுமேர், குஜராத்தில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சோஹன் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஜெய்ப்பூரில் பயிற்சி எடுத்து வந்தார்.

இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், சுமேர், கடந்த புதன்கிழமை குடும்பத்தினருடன் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்த போது, வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்துள்ளார். இந்தச் செய்தி குறித்து அறிந்து வீட்டுக்கு வந்த சோஹன், வியாழக்கிழமை அதிகாலை குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்துள்ளார்.  இரண்டாவது வழக்கில் தற்கொலையாக இருக்கலாமோ என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருகிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.