மோடி குறித்த பிபிசி விடியோவுக்கு மத்திய அரசு கண்டனம்!
குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் பதவியில் இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் தரம்தாழ்ந்த வகையில் விடியோ பரப்புவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
படிக்க | குஜராத் கலவரம்: மோடி தொடர்பான பிபிசியின் பரபரப்பான ஆவணப்படம்
Advertisement
2002 குஜராத் கலவரத்தில் நடைபெற்ற விசாரணை மற்றும் அப்போது அம்மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் நிலை குறித்து ''இந்தியா: மோடி மீதான கேள்வி'' (பகுதி 1) என்ற ஆவணப்படத்தை செவ்வாய்க்கிழமை (ஜன.17) பிபிசி நிறுவனம் லண்டனில் ஒளிபரப்பியது.
அதனைத் தொடர்ந்து மறுநாள் யூடியூபிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டது. இதற்கு பலர் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
இந்நிலையில், பிபிசி வெளியிட்ட இந்த ஆவணப்படத்துக்கு இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தாம் பாக்சி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, இந்த ஆவணப்படம் இந்தியாவில் ஒளிபரப்பப்படவில்லை. இதனால், ஆவணப்படம் குறித்து கேட்டதையும், எனது நண்பர்கள் பார்த்ததையும் வைத்துதான் நான் எனது கருத்துகளைப் பதிவு செய்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு எதிராக தரம் தாழ்ந்த கருத்துகளைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். முழுக்க ஒற்றைச்சார்பு மனநிலையில் எடுக்கப்பட்ட ஆவணப்படம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதுபோன்ற முயற்சிகளை ஊக்கப்படுத்தக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.