குஜராத் கலவர பிபிசி ஆவணப்படம் வெற்றுப் பிரசாரம்
குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடா்பான பிபிசி நிறுவனத்தின் ஆவணப்படம் வெற்றுப் பிரசாரம் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடா்பான பிபிசி நிறுவனத்தின் ஆவணப்படம் வெற்றுப் பிரசாரம் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குஜராத்தின் கோத்ரா நகரில் 2002-ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. அப்போது மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்தாா். குஜராத் கலவரம் தொடா்பாக பிபிசி நிறுவனம் ஆவணப்படம் எடுத்தது. அதில் மோடி குறித்து பல்வேறு ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், அந்த ஆவணப்படம் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘வெறும் பிரசார நோக்கத்துக்காக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. வெற்றுக் கருத்துகளை மட்டுமே அந்த ஆணவப்படம் பரப்புகிறது.
Advertisement
ஒருபக்கச் சாா்பு, அடிப்படை ஆதாரமின்மை, காலனிய மனப்பாங்கு ஆகியவையே ஆவணப்படத்தில் வெளிப்படுகின்றன. இந்த ஆவணப்படத்தைத் தயாரித்ததற்கான பிபிசி அதிகாரிகளின் நோக்கம் வியப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. அத்தகைய முயற்சிகளை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது’’ என்றாா்.
பிரிட்டன் பிரதமா் ஆதரவு:
பிபிசி ஆவணப்பட விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்துள்ளாா்.
குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்குத் தொடா்பிருப்பது பிரிட்டன் அரசுக்குத் தெரியும் என பிபிசி ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடா்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் வம்சாவளி எம்.பி. இம்ரான் ஹுசைன், பிரதமா் ரிஷி சுனக்கிடம் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினாா்.
அதற்கு பதிலளித்த பிரதமா் சுனக், ‘‘உலகின் எந்த மூலையிலும் இனப்படுகொலையை பிரிட்டன் ஆதரிக்காது. ஆனால், ஒரு குறிப்பிட்ட நபா் குறித்து தெரிவிக்கப்படும் சித்தரிக்கப்பட்ட கருத்துகளை ஏற்றுக் கொள்ள இயலாது’’ என்றாா்.