முகப்பு
இந்தியா

கேரளத்தில் தொடரும் கனமழை: 19 பேர் உயிரிழப்பு; 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்கவைப்பு!

கேரளத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடரும் கனமழையால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 ஆயிரத்துக்கு அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

Updated On : 9 ஜூலை, 2023 at 12:08 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:31 PM

கேரளத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடரும் கனமழையால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 ஆயிரத்துக்கு அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கேரளத்தில் பருவமழையின் தீவிரம் குறைவது போல் தெரிந்தாலும், கேரளத்தின் சில பகுதிகளில் கனமழை இன்னும் தொடர்ந்து வருகிறது. மாநிலத்தில் தொரும் கனமழையால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. 

இது தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு சார்பில் தெரிவித்ததாவது: கனமழை காரணத்தினால் கேரளத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். 10,399 பேர் 227 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 1,100 வீடுகள் மழையினால் சேதமடைந்துள்ளன. மற்ற சேதாரங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக கேரளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கேரளத்தின் ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்ததில் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநிலத்தின் பல இடங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.