தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் சத்தியாகிரகப் போராட்டம் நடத்துவோம்: எடியூரப்பா
காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தாவிட்டால் சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சத்தியாகிரப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தாவிட்டால் சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சத்தியாகிரப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
சட்டமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக 5 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் செயல்படுத்த தவறினால் ஆட்சியிலிருந்து விலகவும் வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்!
அப்போது அவர் பேசியதாவது: கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு தேவையின்றி மத்திய அரசின் மீது பழிசுமத்தி வருகிறது. தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது. ரேஷனில் அரிசி வழங்குவது தொடர்பாக கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மத்திய அரசின் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மத்திய அரசு மக்களுக்காக ஏற்கனவே 5 கிலோ அரிசியினை இலவசமாக வழங்குகிறது. மாநில அரசுக்கு கூடுதலாக அரிசி தேவைப்பட்டால் அவர்கள் அரிசியினை வாங்கி அரிசி வழங்கல் தொடர்பான அவர்களது தேவையினைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் அதற்கு பதிலாக பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறார்கள்.
காங்கிரஸ் 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது. அந்த ஐந்து வாக்குறுதிகளில் மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற வாக்குறுதியைத் தவிர மற்ற வாக்குறுதிகள் எதனையும் காங்கிரஸ் செயல்படுத்தவில்லை. சட்டமன்றக் கூட்டம் தொடங்குவற்கு மற்ற நான்கு வாக்குறுதிகளையும் நிறைவேற்றாவிட்டால் சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படும். அதனால், அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.
கர்நாடகத்தின் சட்டமன்ற கூட்டத் தொடர் வருகிற ஜூலை 3 முதல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.