முகப்பு
இந்தியா

செய்தி ஊடக அலுவலகம், ஊடகவியலாளர் வீடுகளில் சோதனை

புது தில்லியில் உள்ள செய்தி இணையதள அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 30 இடங்களில் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சோதனை நடத்தி வருகிறது.

Updated On : 3 அக்டோபர் 2023, 2:39 pm IST
பகிர்:


புது தில்லியில் உள்ள செய்தி இணையதள அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 30 இடங்களில் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சோதனை நடத்தி வருகிறது.

இந்த சோதனையானது, தில்லி, நொய்டா மற்றும் காஸியாபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுவதாகவும், இந்த செய்தி இணையதளத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள், ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த சோதனையின்போது, பணப்பரிமாற்றம் தொடர்பான மின்னணு ஆதாரங்கள், லேப்டாப், செல்லிடப்பேசி, கணினியில் கிடைத்த தரவுகள் உள்பட பலவற்றை காவல்துறையினர் கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறை சிறப்புப் பிரிவு காவலர்கள், புதிதாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

Advertisement

இந்த செய்தி இணையதளத்தை நடத்துவதற்குத் தேவையான நிதி ஆதாரம் தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்த அலுவலகத்தில் சோதனை நடத்தியிருந்தனர். இந்த சோதனையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவு இன்று சோதனையை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த செய்தி இணையதளம், சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், இது பற்றி செய்தி வெளியிடுகையில், சீனாவிடமிருந்து நிதி வருவதாக செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கிடையே, அமலாக்கத் துறை நடத்திய சோதனையின்போது, செய்தி இணையதளத்துக்கு நிதி வழங்கிய நிறுவனங்களை ஆய்வு செய்தபோது சீன ஆதரவாளர் நெவில் சிங்கத்துக்கு தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.