முகப்பு
இந்தியா

பிரக்ஞானந்தாவுக்கு பரிசு வழங்கிய இஸ்ரோ தலைவர்!

செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தாவை சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கே சென்று வாழ்த்தினார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:09 AM
பிரக்ஞானந்தாவுடன் சோம்நாத்
பகிர்:

செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தாவை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சென்று சந்தித்து பரிசு வழங்கினார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் எஸ்.சோம்நாத். 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். இந்நிலையில் திங்கள்கிழமை அவர் செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவை அவரது வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து உலகக்கோப்பை போட்டியில் அவரின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டி சிறிய அளவிலான சந்திரயான் மாதிரியை பரிசளித்தார். 

பின்னர் இதுகுறித்து பேசிய சோம்நாத், “பிரக்ஞானந்தாவின் சாதனையால் நாம் அனைவரும் பெருமையடைகிறோம். சதுரங்கம் இந்தியாவில் தொடங்கிய விளையாட்டு.  நிலவில் பிரக்ஞான் இருப்பதற்காக பெருமை கொள்கிறோம். பூமியில் இந்த பிரக்ஞானந்தா இருக்கிறார். நிலவில் நாம் என்ன சாதித்தோமோ, அதை இவர் நிலத்தில் சாதித்திருக்கிறார்” என்று தெரிவித்தார். 

இந்த சந்திப்பு குறித்து பிரக்ஞானந்தா கூறுகையில், “இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை சந்தித்ததில் பெருமிதம் அடைகிறேன். எனது பயணம் மற்றும் பயிற்சி குறித்து விவாதித்தோம். ராக்கெட் தயாரிக்கப்படும் திருவனந்தபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வருமாறு என்னை அழைத்துள்ளார். விரைவில் அங்கு செல்ல உள்ளேன்” என்று கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த உலகக்கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார் பிரக்ஞானந்தா என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.