த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும்: நடிகை குஷ்பு
நடிகை த்ரிஷாவிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷாவிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர், சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து, உதயநிதி ஸ்டாலின் கடுமையாகப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
Advertisement
Advertisement
தவெக அமைச்சர்கள் பலரும் உதயநிதிக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் மற்றும் அருண்ராஜ் போன்றோர் உதயநிதியை கடுமையாக விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, உதயநிதி த்ரிஷாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு தனது சமூக ஊடகப் பதிவில், “உதயநிதி ஸ்டாலின் பேசியதைக் கேட்டேன். மிகவும் தரக்குறைவான, மலிவான பேச்சாக அது இருந்தது. அவர் விரும்பும் அரசியல் கலாசாரத்தைப் பிரதிபலிப்பதைப் போன்று அவரது பேச்சு அமைந்தது.
இதுபோன்ற மனநிலை கொண்டவர் ஒரு அரசியல் கட்சியை வழிநடத்தவும், ஒரு நாள் மாநிலத்தை ஆளவும் விரும்பினால், கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.
பெண்களைத் தரக்குறைவாகப் பேசி, இழிவுபடுத்துவதை ஒரு அரசியல் நாடகமாக நடத்தி, தங்கள் ஆதரவாளர்களின் கைதட்டல், விசில்களைப் பெறுவதில் மகிழ்பவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? என்னை விட வேறு யார் இதை நன்கு அறிவார்கள்?
இதுபோன்ற பேச்சுகளைச் சாதாரணமாகக் கருதுபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். பெண்களின் கண்ணியம் அரசியலுக்காக பலிகடாவாக்கப்பட்டால், எந்தவொரு குடும்பமும் (உங்கள் குடும்பம் உட்பட) அதன் விளைவுகளிலிருந்து தப்ப முடியாது. அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுவில் பேசுவதற்கு ஒரு எல்லை இருக்கவேண்டும்.
பெண்கள் மதிக்கப்படவேண்டுமே தவிர, உங்களின் கேளிக்கைகளுக்கும், விருப்பங்களுக்கும் பகடை காய்களாக பயன்படுத்தப்படக்கூடாது.
உங்கள் அரசியல் எதிரியின் செயல்பாட்டுக்கு ஈடுகொடுக்க முடியாத போது, தனிப்பட்ட அவதூறுகளையும் ஆபாசத்தையும் கையிலெடுப்பதே மிக எளிதாகத் தப்பிக்கும் வழியாக அமைந்து விடுகிறது.
உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது தந்தை முக ஸ்டாலின் ஆகியோர் பல ஆண்டுகளாகப் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்துள்ளனர். ஆனால், அது பொது வாழ்க்கைக்கான அளவுகோலாக ஆகிவிடாது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி த்ரிஷாவை அவமதித்ததற்காக பொது மேடையில் அவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
தனது இழிவான பேச்சை அவர் ஒப்புக்கொள்வாரா என்பதையும், மன்னிப்பு கேட்பதற்கான துணிச்சலும் கண்ணியமும் அவரிடம் உள்ளதா என்பதையும் பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
Actress Khushbu has stated that Leader of the Opposition Udhayanidhi should apologize to actress Trisha.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.