பதிலுரைக்கு முதல்வர் தயாராகி வர வேண்டும்! உதயநிதி ஸ்டாலின்
காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உதயநிதி ஸ்டாலின் உரை...
காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்க முதல்வர் ஜோசப் விஜய் நன்றாக தயாராகி வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்யின் துறைகளான தமிழ்நாடு காவல்துறை - தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளின் மானிய கோரிக்கை மிதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த விவாதத்தில் தவெக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளையும் புகார்களையும் பட்டியலிட்ட உதயநிதி ஸ்டாலின், அவர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
Advertisement
Advertisement
மேலும் அவர் பேசியதாவது:
“திமுக ஆட்சியில் குற்றச் சம்பவங்கள் நடந்தபோது, சாரி வேண்டாம், நீதிதான் வேண்டும் என்று அப்போது முதல்வர் தெரிவித்தார். ஆனால், தவெக ஆட்சியில் சாரியும் கிடைக்கவில்லை, நீதியும் கிடைக்கவில்லை.
தவெகவின் 116 நாள்கள் ஆட்சியில் 200 கொலைகள், 300 பாலியல் வன்கொடுமைகள் உள்பட 550 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சட்டம் - ஒழுங்கும், உளவுத் துறையில் தோல்வி அடைந்துவிட்டது.
முதல்வரின் கைகளில் தான் காவல்துறை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. மாணவர்கள் போராட்டத்துக்கு அஞ்சி கடற்கரையை மூடிய ஒரே அரசு இந்த அரசுதான். நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது ஏன்? பெரியாரை கொள்கை தலைவராக வைத்துக் கொண்டு திராவிட கழகத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்தது ஏன்?
நாடகத்தின் இவருக்கு பதில் இவர் என்று வருவது போன்று, ஒரு துறை சார்ந்து கேள்வி கேட்டால், வேறு துறை அமைச்சர் பதிலளிக்கிறார்.
நான் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முதல்வர் நன்றாக தயாராகி, திங்கள்கிழமை பதிலுரை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், “முதல்வர் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பேரவையில் அமர்ந்து நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் கூர்ந்து கவனித்து வருகிறார். திங்கள்கிழமை அவர் பதிலளிப்பார்” என்றார்.
The Chief Minister must come prepared to give a reply - Udhayanidhi Stalin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.