தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின்
காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உதயநிதி ஸ்டாலின் உரை...
தவெகவின் ஒட்டுமொத்த திட்டங்களுக்கும் சேர்த்து ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்யின் துறைகளான தமிழ்நாடு காவல்துறை - தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளின் மானிய கோரிக்கை மிதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
Advertisement
Advertisement
”சட்டம் - ஒழுங்கு பிரச்னை பற்றி பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னை குறித்து எழுப்பும் கேள்விகளுக்கு திசைத் திருப்பாமல் முதல்வர் பதிலளிப்பார் என்று நம்புகிறேன். மக்கள் பிரச்னைகளை எழுப்புவதற்காகதான் மக்கள் எங்களை எதிர்க்கட்சியாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
திமுக ஆட்சியில் கொலை, பாலியல் குற்றங்கள், சாதிய பாகுபாடு கொலை பெருமளவு குறைந்திருப்பதாக காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் நீங்களே தெரிவித்துள்ளீர்கள். அதனை ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
தவெக அரசு அமைந்து 116 நாள்களில் புதிய திட்டங்கள் கொண்டு வந்ததைவிட, எங்கள் திட்டங்களைதான் ரத்து செய்துள்ளீர்கள். ஒன்று பெயரை மாற்றுகிறீர்கள் அல்லது திட்டத்தையே ரத்து செய்கிறீர்கள்.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு டாப் கியரில் சென்றுகொண்டிருந்தது. ஆனால், இந்த 116 நாள்களில் ரிவர்ஸ் கியரில் சென்றுகொண்டிருக்கிறது. திமுக திட்டங்களை ரத்து செய்தது ஏன்?
விவசாயக் கடன் முழுத் தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள், அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் எனத் தெரிவித்துள்ளீர்கள். ஆனால், வாக்குறுதிகளை முழுவதுமாக நிறைவேற்றாமல் அரைகுறையாக அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எனச் சொன்னீர்கள். ஆனால், அரசின் மொத்த அறிவிப்புகளுக்கும் சேர்த்து தாய்மாமன் காது குத்தும் திட்டம் என வைத்துக் கொள்ளலாம்.
இந்த நிலை எப்போது மாறும் என்பதை முதல்வரின் பதிலுரையில் தெரிவிக்க வேண்டும்.
நீண்ட காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நீண்டகால விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். அதனை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்.
தவெகவின் 116 நாள்களில் நாள்தோறும் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருகிறது. நகைக்காக கொலை, போதைப் பொருளை அம்பலப்படுத்தினால் கொலை என கொலை நடக்காத நாளே இல்லை.
கடந்த ஆகஸ்ட்டில் கோவையில் மட்டும் 9 கொலைகள் நடைபெற்று வருகின்றன. தவெக ஆட்சியில் 10 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. முதலில் ஆணவக் கொலை என்றார்கள். தவெக ஆட்சியில் கெளரவக் கொலை என்றும், காதல் கொலைகள் எனவும் கூறத் தொடங்கிவிட்டனர்.
கடந்த ஆட்சியில் சட்டம் - ஒழுங்கை குறை கூறிவிட்டு, தற்போது தனிமனித ஒழுக்கம் என்கிறார்கள்”
Udhayanidhi Stalin's speech during the debate on the demand for grants for the Police Department.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.