பாலியல் வழக்கு விசாரணையில் அத்துமீறல்: நீதித்துறை நடுவா் மீது வழக்குப் பதிவு
பாலியல் வழக்கு விசாரணையின்போது பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காயங்களைக் காண்பிக்குமாறு கூறி அத்துமீறிய புகாரில் ராஜஸ்தான் மாநிலம் கரெளலி மாவட்ட நீதித்துறை நடுவா் (மாஜிஸ்திரேட்) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து கரெளலி மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் மீனா கூறியதாவது: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு கரெளலி மாவட்ட ஹிந்தெளன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஆடைகளைக் கழற்றி காயங்களைக் காண்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளாா்.
அதற்கு அந்தப் பெண் மறுத்துள்ளாா். நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தபிறகு, மாஜிஸ்திரேட்டுக்கு எதிராக அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகாரைப் பதிவு செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பெண்ணின் மாண்பை பாதிக்கும் வகையில் நடந்துகொள்ளுதல் என்ற இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்கீழ் மாஜிஸ்திரேட் மீது கோட்வாலி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.