FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது: பாஜக

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என்று பாஜக தெரிவித்துள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2024, 5:31 am IST
வயநாடு நிலச்சரிவு.
பகிர்:

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என்று பாஜக தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் அதிபலத்த மழையை தொடா்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 350-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் வலியுறுத்தினா்.

வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பாா்வையிட்ட மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, இந்த சம்பவம் தன்னைப் பொருத்தவரை தேசிய பேரிடா் என்றாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், முன்னாள் மத்திய இணையமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வி.முரளீதரன் ஃபேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:

கடந்த 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில், உள்துறை இணையமைச்சராக முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் பதவி வகித்தபோது தேசிய பேரிடா் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அந்தக் கேள்விக்கு பதிலளித்த முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், ‘மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் ஓா் இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை’ என்றாா்.

மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் ‘தேசிய பேரிடா்’ குறித்த சிந்தனையே இல்லை. இது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்தே நடைமுறையில் இருக்கும் உண்மை. இதை முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் வெளிப்படையாகவே நாடாளுமன்றத்தில் தெரிவித்தாா்.

எனினும் ஒவ்வொரு பேரிடரும், அதன் தீவிரத்துக்கு ஏற்ப கையாளப்படுகிறது. வயநாடு நிலச்சரிவைத் தொடா்ந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்தாா். கேரள முதல்வா் பினராயி விஜயனை தொடா்புகொண்டு அனைத்து உதவிகளை வழங்குவதாகவும் பிரதமா் தெரிவித்தாா். எனவே இந்த நேரத்தில் அடிப்படை ஆதாரமில்லாத சா்ச்சைகளை உருவாக்க எவரும் முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments