சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் 10 ஆண்டுகளில் 453 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் 453 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் சாக்கடை மற்றும் கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்கையில் 453 பேர் உயிரிழந்ததாக மத்திய சமூகநீதித் துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
சமூகநீதித் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயிடம் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், சாக்கடை மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்கையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 453 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார்.
கைகளால் சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்குத் தடை மற்றும் மறுவாழ்வு அளிக்கும் 2013-ம் ஆண்டின் சட்டப்படி துப்புரவுப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதையை கவனத்தில் கொண்டு மாவட்டங்கள் அனைத்திலும் கைகளால் சாக்கடை சுத்தம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, “31.07.2024 தேதி வரை மொத்தமுள்ள 766 மாவட்டங்களில் 732 மாவட்டங்களில் கைகளால் சாக்கடை சுத்தம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என அத்வாலே தெரிவித்துள்ளார்.
மேலும், கைகளால் துப்புரவுப் பணி செய்வதைத் தடுக்க ஸ்வச் பாரத் திட்டத்தில் ரூ.371 கோடி வழங்க அரசு ஒப்புதல் அளித்ததாகவும் கூறியுள்ளார்.
”சிறிய நகரங்களில் மேம்படுத்தப்பட்ட இயந்திரங்களை வாங்குவதற்கும், இயந்திரமயமாக்கல் மூலம் கைகளால் சாக்கடை சுத்தம் செய்யும் பணியை ஒழித்து தொழிலாளர்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் இந்த நிதி ஒதுக்கப்பட்டது.
5,000 கழிவுநீர் தொட்டி வாகனங்கள், 1,100 கழிவுகள் சுத்தம் செய்யும் இயந்திரங்கள், 1,000 தூர்வாரும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு மாநிலஙளில் இயந்திரமயமாக்கல் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க, அவசர கால கழிவுநீர் அகற்றுதலுக்கான உதவி எண்களை ஏற்படுத்த, மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC) நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கூடுதலாக, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அவசரகால கழிவுநீர் அகற்றுதலுக்கான உதவி எண்களை ஏற்படுத்தவும், விழிப்புணர்வு தொடர்பான தகவல், கல்வி மற்றும் தகவல் பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன” என மக்களவையில் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.