உ.பி.யில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சம்பளத்திற்கு ஆபத்து... காரணம் என்ன?
உத்தரப் பிரதேசத்தில் அரசின் உத்தரவிற்கு இணங்க மறுத்ததால் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் சம்பளம் ஆபத்தில் உள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் அரசின் உத்தரவிற்கு இணங்க மறுத்ததால் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் சம்பளம் ஆபத்தில் உள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு கடந்தாண்டு வெளியிட்ட உத்தரவில், அரசு ஊழியர்கள் தங்களது அசையும், அசையா சொத்துக்களின் விவரங்களை அரசு இணையதளமான ‘மானவ் சம்பதா’-வில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்காமல் இருப்பவர்களுக்கு, விதிமீறல் நடவடிக்கையாக இந்த மாதச் சம்பளம் வழங்கப்படாது எனவும் அவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
முன்னதாக, இந்த உத்தரவில் கடந்தாண்டு டிசம்பர் 31 காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்ட போதிலும் 26 சதவீதம் பேர் மட்டுமே சொத்து விவரங்களை பதிவு செய்திருந்தனர். எனவே, தற்போது காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஆட்சியில் உத்தரப் பிரதேசத்தில் 17 லட்சத்து 88 ஆயிரத்து 429 அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். அதில் 26 சதவீதம் பேரின் சொத்து விவரங்கள் மட்டுமே பதிவாகி, மீதமுள்ள 13 லட்சம் பேர் பதிவு செய்யாமல் உள்ளனர்.
இது தொடர்பாகப் பேசிய உ.பி. தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் சிங் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் சொத்து விவரங்களைப் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே ஆகஸ்ட் மாத சம்பளம் வழங்கப்படும் என்றும், மற்றவர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
”இந்த நடவடிக்கை அரசு துறைகளின் மீதான வெளிப்படைத்தன்மையையும் பொறுப்பையும் மேம்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஊழல் விஷயத்தில் எவ்வித சகிப்புத்தன்மையும் இல்லை என்ற கொள்கையை நாம் பின்பற்றுகிறோம்” என்று அமைச்சர் டானிஷ் அசாத் அன்சாரி கூறியுள்ளார்.
மேலும், பணியாளர்கள் துறையின் முதன்மை செயலாளர் எம். தேவ்ராஜ், தலைமை செயலாளரால் வெளியிடப்பட்ட உத்தரவை அனைத்து கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் அலுவலகத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.