முகப்பு
இந்தியா

தேசிய கையெழுத்துப் போட்டி: ஆந்திர மாணவிகள் சாதனை!

தேசிய அளவிலான கையெழுத்துப் போட்டியில் முதல் 13 இடங்களில் 5 இடங்களைப் பிடித்து ஆந்திர மாணவிகள் சாதனை.

Updated On : 25 ஆகஸ்ட், 2024 at 2:53 PM
தேஜஸ்ரீ / சி.எச். லட்சுமி காவியா - TNIE
பகிர்:

தேசிய அளவிலான கையெழுத்துப் போட்டியில் முதல் 13 இடங்களில் 5 இடங்களைப் பிடித்து ஆந்திரத்தைச் சேர்ந்த மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர்.

கடந்த 2018-ல் நடைபெற்ற போட்டியில் முதல் 22 இடங்களுக்குள் இடம்பெற்றிருந்த நிலையில், இம்முறை நடைபெற்ற போட்டியில் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.

என்.ஆர்.ஐ. தேசிய கையெழுத்து அகாதெமி, விஜயவாடாவைச் சேர்ந்த அம்மா ஒடி கையெழுத்து இயக்கம், அகில இந்திய கையெழுத்து பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில், கடந்த ஜூலை 14ஆம் தேதி கையெழுத்துப் போட்டி நடைபெற்றது.

Advertisement

இணையம் வாயிலாக நடைபெற்ற இப்போட்டியில், நாடு முழுவதிலுமிருந்து 3 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் ஆந்திரத்தைச் சேர்ந்த பெத்தி தேஜஸ்ரீ, சூப்பர் சீனியர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றார். சாரதா ஜூனியர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் இவரின் தந்தை வெங்கட ராவ் ஆட்டோ ஓட்டுநர்.

இது குறித்து தந்தை வெங்கட ராவ் பேசியதாவது, எனது மகள் தேஜஸ்ரீ இயல்பிலேயே அர்ப்பணிப்புடன் கடினமாக உழைக்கக் கூடியவர். அவளின் வெற்றியால் நாங்கள் பெருமை அடைகிறோம். மருத்துவர் ஆக வேண்டும் என்பதே அவரின் கனவு என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவன் அர்ஜுன், சிறந்த கையெழுத்துக்கான தேசிய கேப்டனாக கௌரவிக்கப்பட்டார். இவர் விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஹரேந்திர பிரசாத்தினுடைய மகன். கிரிக்கெட், நீச்சல் பயிற்சி, ஓவியத்தில் அதிக நாட்டம் கொண்ட அர்ஜுனுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஆக வேண்டும் என்பதே கனவு. 2023-ல் மாவட்ட அளவில் நடைபெற்ற கையெழுத்துப் போட்டியில் இவர் 2ஆம் இடம் பிடித்திருந்தார்.

எல்லூரு மாவட்டம், கைகலூரு பகுதியைச் சேர்ந்த சி.எச். லட்சுமி காவியா, மிகச் சிறந்த கையெழுத்துப் பிரிவில் முதலிடம் பிடித்தார். இவர் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் தந்தை ஸ்ரீனிவாச ராவ், சிறு வயதிலிருந்தே கையெழுத்துப் பயிற்சி அளித்துள்ளார். தொழில்நுட்பத் துறையில் சாதிக்க வேண்டும் என்பதே காவியாவின் கனவாக உள்ளது.

விஜயவாடாவைச் சேர்ந்த கும்மிடி அபிராம தன்விக், தேசிய ஜூனியர் பிரிவில் முதன்மை இடத்தைப் பிடித்தார். இவர் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

விஜயவாடாவைச் சேர்ந்த போபண்ண முகுந்த பிரியா என்ற 8 ஆம் வகுப்பு மாணவி இதே பிரிவு போட்டியில் 3ஆம் இடம் பிடித்து அசத்தினார்.

அகில இந்திய கையெழுத்துப் பயிற்சியாளர் சங்க செயலாளர் ஷேக் ஹுசைன் கூறியதாவது, ஆந்திர பிரதேச மாணவர்களின் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்களின் சாதனை எதிர்காலத்தில் பல மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments