முகப்பு
இந்தியா

வெறுங்காலில் நடக்கலாமா? மருத்துவருக்கும் ஸ்ரீதர் வேம்புவுக்கும் வலுக்கும் போர்!

வெறுங்காலில் நடக்கலாமா? என்பது குறித்து கல்லீரல் மருத்துவருக்கும் ஸ்ரீதர் வேம்புவுக்கும் வலுக்கிறது வார்த்தைப் போர்!

Updated On : 26 ஆகஸ்ட், 2024 at 11:18 PM
நடைப்பயணம் - Center-Center-Kochi
பகிர்:

வெறுங்காலில் நடப்பது உடல் நலனுக்கு நன்மை பயக்குமா? பயக்காதா? என்பது குறித்த கருத்தில், புகழ்பெற்ற கல்லீரல் மருத்துவருக்கும், ஸோஹோ நிர்வாகி ஸ்ரீதர் வேம்புவுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.

வெறுங்காலில் நடப்பது குறித்து கருத்து மோதல், டாக்டர் சைரியாக் ஆபி பிலிப்ஸ் - ஸோஹோ தலைமை செயல் நிர்வாகி ஸ்ரீதர் வேம்பு இடையே சமூக வலைத்தளத்தில் வெடித்துக்கொண்டிருக்கிறது.

அவ்வப்போது சமூகத்துக்கும், உடல் நலனுக்கும் பல நல்ல பயனுள்ள தகவல்களை ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டு வருவார். அவரை பின்தொடர்வோர், அவரது கருத்துகளையும் அதிகம் விரும்பி பின்பற்றி வருகிறார்கள்.

Advertisement

இந்த நிலையில்தான், வெறுங்காலுடன் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஸோஹோ தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், அதனை கடுமையாக விமர்சனம் செய்திருந்த டாக்டர் பிலிப்ஸ் "போலி அறிவியல்" என்றும் "மருத்துவ அறிவற்றவர்" என்றும் விமர்சித்திருந்தார்.

சில ஆண்டு காலமாக, தான் வெறுங்காலில் நடக்கும் பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும், தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவிந்தபேரி கிராமத்தில், தனது பண்ணை நிலத்தில் வெறுங்காலில் நடப்பதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.

மற்றவர்களும் இதுபோல, வெறுங்காலில் நடக்க பழகலாம் என்றும், இது பூமிக்கும், மனிதர்களுக்கும் ஒரு நேரடியான இணைப்பை ஏற்படுத்தி, உடல் நலனுக்கு பல்வேறு பயன்களை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், கல்லீரல் மருத்துவர் என சமூக ஊடங்களில் அறியப்படும் டாக்டர் பிலிப் இதனை ஏற்கவில்லை. இவர் எதிர்க்கருத்தைப் பதிவிட, சமூக வலைத்தளத்திலேயே இருவரும் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். மனித மின் அதிர்வெண்களுக்கும் பூமிக்கும் இடையே ஒரு தொடர்பை முன்வைக்கும் 'கிரவுண்டிங்' யோசனையை அவர் பிலிப் மறுத்துவிட்டார். இது நிரூபிக்கப்படாத கருத்து என்று கூறியதோடு, கால் மூலம் நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயமும், பல உடல்நலப் பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அறிவியல்பூர்வமாக எந்த பலனும் மனிதனுக்கு ஏற்படாது. இது தொடர்பான பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு பயனற்றதாகவே முடிந்துள்ளது என்றும் வேம்புவின் சமூகப் பதிவை மேற்கோள்காட்டி பதிவிட்டிருந்தார்.

மேலும், 'இந்திய சுகாதாரத்துறையின் மிகப்பெரிய சவால், விழிப்புணர்வு சிந்தனை, திறன்களை மக்களுக்கு ஏற்படுத்துவதில்கூட இல்லை, ஆனால் வேம்பு போன்ற உடல்நலம் தொடர்பான கல்வியறிவு இல்லாத பூமர் மாமாக்களை எவ்வாறு தவிர்ப்பது என்பதை சாமானிய மக்களுக்கு கற்றுக்கொடுப்பதில்தான் உள்ளது, என்று பிலிப் கடுமையாக விமர்சித்திருந்தார்.

பதிலுக்கு, வேம்பு கடுமையான பதிலடியைக் கொடுத்திருந்தார். "திமிர்பிடித்த மருத்துவர்களிடமிருந்து விலகி இருங்கள்" என்று தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு அறிவுறுத்தினார். அவர் அதில் கூறியிருந்தாவது, "எனக்குத் தெரிந்த சிறந்த மருத்துவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான அடக்கமானவர்கள், ஏனென்றால் மனித உடல் எவ்வளவு சிக்கலானது மற்றும் எவ்வளவு சவாலானது என்பது அவர்களுக்குத் தெரியும். உடலும் மனமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது என்பதும் அவர்களுக்குத் தெரியும் என்று கூறி வார்த்தைப் போருக்கு எண்ணெய் ஊற்றியிருந்தார். இவ்வாறே சமூக ஊடகத்தில் இவர்களது மோதல் தொடர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.