ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை: பிரதமர் மோடி!
71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர வேலைக்கான நியமனக் கடிதங்கள்..
புது தில்லி: கடந்த ஒன்றை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளைத் தனது அரசு வழங்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
ரோச்கர் மோளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி கூறியதாவது,
இந்த நிகழ்ச்சியில் சுமார் 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர வேலைக்கான நியமனக் கடிதங்களை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதனை என்றார்.
Advertisement
இளைஞர்களுக்கு இதற்கு முன்னதாக எந்த அரசும் அரசு வேலைகளை இந்தளவில் வழங்கியதில்லை. மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஆள்சேர்ப்பு செயல்முறை நடத்தப்படுகிறது.
பணியமர்த்தப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் என்று குறிப்பிட்ட அவர், அவர்கள் அனைத்து துறைகளிலும் சுயச்சார்புகளாக மாறுவதுதான் தனது அரசின் முற்சி.
பெண்களுக்கு 26 வார மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான அரசின் முடிவு அவர்களின் தொழில் வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியுள்ளது. ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டின் பெரும்பான்மை உரிமையாளர்கள் பெண்கள்தான். நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்திய இளைஞர்களின் திறன்களையும், திறமையையும் அதிகபட்சமாகப் பயன்படுத்துவதே தனது அரசின் முன்னுரிமை. டிஜிட்டல் இந்தியா அல்லது விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் சீர்திருத்தங்கள் என பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றன.
தேசியக் கல்விக் கொள்கை இளைஞர்களின் வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுத்துள்ளது, தாய்மொழிப் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது.
இளைஞர்களுக்கு ஆள்சேர்ப்புத் தேர்வுகளை 13 இந்திய மொழிகளில் நடத்தப்படுகிறது. மொழி ஒரு தடையாக இல்லை என்பதை அரசு உறுதி செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் சரண் சிங் கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் செயல்பட்டார் என்று குறிப்பிட்ட மோடி, கிராமங்களில் வேலை வாய்ப்பு மற்றும் சுயவேலை வாய்ப்புகளை உருவாக்கி தனது அரசு இதைப் பின்பற்றி வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பணியமர்த்தப்பட்ட 71,000 பேரில் 29 சதவீதம் பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். தனது அரசின் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆள்சேர்ப்பு 27 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.