வாகனத்தை முந்திச் சென்ற தலித் நபர்: நிர்வாணப்படுத்தி தாக்கிய ம.பி. போலீஸார்!
மத்தியப் பிரதேசத்தில் தங்களின் வாகனத்தை முந்திச் சென்ற தலித் நபரை போலீஸார் நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் காவல்துறை வாகனத்தை முந்திச் சென்றதாகக் கூறி, தலித் நபர் ஒருவரைக் காவல்துறையினர் நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் கஜூரஹோ நகரத்தைச் சேர்ந்தவர் ரோஹித் வால்மீகி. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் துப்புரவு பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த வாரம் (ஜூலை 18) தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தவர், வழியில் காவல்துறை மற்றும் மின்சாரத் துறையினரின் வாகனங்களை முந்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவரை நிறுத்திய காவல்துறையினர் வாகனத்தைத் தாறுமாறாக ஓட்டியதாகக் குற்றம்சாட்டி அவரிடம் தாகத வார்த்தைகளில் பேசியுள்ளனர். தொடர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி காவல்நிலையத்தில் வைத்து ரோஹித் வால்மீகியை நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். இதனால், பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ரோஹித் தனது வீட்டிற்குத் திரும்பியவுடன் தற்கொலைக்கு முயன்று தனது குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
பின்னர், தன்னைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது கடந்த ஜூலை 20 அன்று உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய சத்தர்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் அகம் ஜெயின், “இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டக் காவலர்களின் தலையீடு இந்த விஷயத்தில் இருக்கக்கூடாது என்பதால் அவர்களை காவல்நிலையத்தை விட்டு நீக்கியுள்ளோம். சம்பந்தபட்ட நபர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின் கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியுள்ளார்.