முகப்பு
இந்தியா

புணே ஆட்சியர் மீது பாலியல் புகார் அளித்ததால் பழிவாங்கும் நடவடிக்கை: பூஜா கேத்கர் வாதம்

பூஜா கேத்கர் தொடர்ந்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

Updated On : 31 ஜூலை 2024, 2:02 pm IST
பூஜா கேத்கர் - ANI
பகிர்:

பூஜா கேத்கர் தொடர்ந்த முன்ஜாமீன் மனு மீது நாளை(ஆக. 1) மாலை தீர்ப்பு வழங்கப்படும் என்று தில்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கூடுதல் அமர்வு நீதிபதி தேவேந்திர குமார் ஜங்காலா முன்பு, பூஜா கேத்தர் தாக்கல் செய்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

பூஜா கேத்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாதவன், யுபிஎஸ்சி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து வாதத்தை முன்வைத்தார்.

Advertisement

Advertisement

பூஜா தனது பெயரை ஒவ்வொரு முறை மாற்றும்போதும் அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது, 8 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவ குழுவால் உடலில் 47 சதவிகிதம் குறைபாடு இருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், புணே ஆட்சியர் மீது பூஜா கேத்கர் அளித்த பாலியல் புகாருக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த புகார்கள் எழுப்பப்பட்டுள்ளதாக பூஜா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையால் இதுவரை எந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் நான் மேற்கொள்ளவில்லை, ஆகவே என்னை கைது செய்ய தடை விதித்து முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

பூஜா வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த யுபிஎஸ்சி மற்றும் தில்லி அரசு தரப்பு வழக்கறிஞர்கள், இந்த வழக்கில் அவரை கைது செய்து விசாரணை செய்வது அவசியம் என்று வாதங்களை முன்வைத்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நாளை மாலை தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியபோது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அண்மையில் பூஜா கேத்கா் சிக்கினாா். இதைத் தொடா்ந்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி பணியில் சோ்ந்தது உள்பட அவா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதை விசாரித்த மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறையின் கூடுதல் செயலா் மனோஜ் துவிவேதி, பூஜா கேத்கர் முறைகேட்டில் ஈடுபட்டதை உறுதி செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற தோ்வில் பூஜா தோ்ச்சி பெற்றது செல்லாது எனவும், எதிா்காலத்தில் அவா் குடிமைப் பணித் தோ்வுகளில் பங்கேற்பதற்கும் அதிகாரியாக தோ்ந்தெடுக்கப்படுவதற்கும் தடை விதிக்கப்படுவதாகவும் யுபிஎஸ்சி தெரிவித்தது.

மேலும், யுபிஎஸ்சி அளித்த புகாரின் அடிப்படையில் பூஜா மீது 4 பிரிவுகளின் கீழ் தில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.