மத்தியப் பிரதேசத்தில் சிறுத்தைகளுக்கான இரண்டாவது இருப்பிடம் தயார்!
மத்தியப் பிரதேசத்தில் காந்தி சாகர் வனவிலங்குகள் சரணாலயத்தில் நடைபெற்று வந்த சிறுத்தைகளின் இருப்பிடத்துக்கான பணிகள் நிறைவு.
மத்தியப் பிரதேசத்தில் காந்தி சாகர் வனவிலங்குகள் சரணாலயத்தில் நடைபெற்று வந்த சிறுத்தைகளின் இருப்பிடத்துக்கான பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தைகளை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டத்தின்கீழ் கடந்த 2022 ஆம் ஆண்டு நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 8 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டது. அதன்பின், கடந்த ஆண்டு பிப்ரவரியில் மேலும் 12 சிறுத்தைகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டது. இந்த சிறுத்தைகளின் பிரதான இருப்பிடமாக குனோ தேசிய பூங்கா பார்க்கப்பட்டது. இதற்கிடையில், சிறுத்தைகளுக்காக புதிய இருப்பிடம் அமைக்கும் பணிகளும் நடைபெற்றன. காந்தி சாகர் வனவிலங்குகள் சரணாலயம் சிறுத்தைகளுக்கான இரண்டாவது இருப்பிடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் காந்தி சாகர் வனவிலங்குகள் சரணாலயத்தில் நடைபெற்று வந்த சிறுத்தைகளின் இருப்பிடத்துக்கான பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாவது: கென்யா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த குழுக்கள் காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயத்தை பார்வையிட்டு, சிறுத்தைகளை அங்கு விடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தனர். அதன் பின்னர், பணிகள் தொடங்கப்பட்டது. காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்துவிட்டதாக முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சிறுத்தைகளுக்கான இரை விலங்குகள் கன்ஹா, சாத்புரா மற்றும் சஞ்சய் புலிகள் சரணாலயத்திலிருந்து காந்தி சாகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தனர்.
காந்தி சாகர் சரணாலயம், குனோ தேசிய பூங்காவிலிருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.