விடியோ பதிவை நீக்குக: சுனிதா கேஜரிவாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
கேஜரிவால் மனைவி சுனிதாவுக்கு உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி..
கலால் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முதல்வர் கேஜரிவால் பேசிய பதிவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என சுனிதா கேஜரிவாலுக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே அவர் நீதிமன்றத்தில் பேசும் விடியோ பதிவை அவரது மனைவி சுனிதா வெளியிட்டதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் வைபவ் சிங் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக கேஜரிவால் பேசிய விடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நீனா பன்சால், கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவை உடனடியாக நீக்குவதுடன் இதுதொடர்பாக சுனிதா கேஜரிவால் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த விடியோவை மறுபதிவேற்றம் செய்தால் சமூக ஊடகங்கள் அதை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.