மேற்கு வங்க ரயில் விபத்துக்கு முக்கிய காரணம் இதுதான்: அதிர்ச்சி தகவல்!
டார்ஜிலிங் மாவட்டத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளான கோர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்துகொண்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை 8 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது.
இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. ரயில் பெட்டிகள் அதிர்ந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறியடித்து ஓடத் தொடங்கினர். இந்த விபத்தில் 9 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ரயில் விபத்து நடைபெற்ற விபத்தில் முழுவீச்சில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கோர விபத்திற்கு முக்கிய காரணம் சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் சென்றதே என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் உயிரிழப்புகள் பதிவாகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். இரு வழித்தடத்திலும் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு இந்தியாவை நாட்டின் ஏனைய பகுதிகளை இந்த வழித்தடம் இணைக்கிறது. விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில் விபத்துக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.