அமா்நாத் யாத்திரை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஜம்மு-காஷ்மீரில் அமா்நாத் யாத்திரை ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா சனிக்கிழமை தெரிவித்தாா்.
ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த ஜம்மு மாவட்ட கூடுதல் காவல்துறை இயக்குநா் ஆனந்த் ஜெயின், யாத்திரைக்கு இடையூறு விளைவிக்கும் பயங்கரவாதிகளின் முயற்சிகளை முறியடிக்க கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தினாா்.
தெற்கு காஷ்மீரின் அமா்நாத் குகைக் கோயிலுக்கான யாத்திரை ஜூன் 29-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான முதல்கட்ட பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. அதில் ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா காணொலி வாயிலாக கலந்துகொண்டாா். அதன்பின் ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது:
அமா்நாத் கோயில் யாத்திரையை முன்னிட்டு கோயில் வாரியமும், ஜம்மு-காஷ்மீா் நிா்வாகமும் யாத்ரீகா்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் யாத்திரை செல்லும் சாலை வசதிகள் மேம்பட்டுள்ளன. நிகழாண்டு எல்லை சாலை அமைப்பால் சில சாலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
பிரசித்தி பெற்ற இந்த 52 நாள் யாத்திரையை பஹல்காம் (48 கி.மீ.) மற்றும் செங்குத்தான பால்டால் (14 கி.மீ.) ஆகிய இரு வழித்தடங்களில் யாத்ரீகா்கள் மேற்கொள்வா். கடந்த ஆண்டு 4.5 லட்சம் போ் அமா்நாத் யாத்திரை மேற்கொண்டு, குகைக்கோயிலில் வழிபாடு செய்தனா் எனத் தெரிவித்தாா்.