சூரஜ் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது!
ரேவண்ணா குடும்பத்தில் மீண்டும் ஒருவர் கைது
பிரஜ்வல் ரேவண்ணாவின் தம்பி சூரஜ் ரேவண்ணா பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினரும், பொதுப்பணித்துறையின் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணாவின் மகனான சூரஜ் ரேவண்ணா மீது மதச்சார்பற்ற ஜனதா தளக்கட்சியின் தொண்டர் ஒருவர், ஹாசன் காவல்துறையிடம் ஜூன் 16ஆம் தேதியில் பாலியல் புகார் அளித்துள்ளார். புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது, ``சூரஜ் தன்னை அவருடைய பண்ணை வீட்டிற்கு அழைத்திருந்தார். அங்கு சென்றபோது, சூரஜ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். மேலும், தன்னை பாலியல் வன்கொடுமையும் செய்தார். அதன்பிறகு, அவர் அரசியல் ரீதியாக முன்னேறுவதற்கு தனக்கு உதவுவதாகவும் கூறினார்” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சூரஜ் ரேவண்ணா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 377 மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டியதன் தொடர்பாக, நேற்று (ஜூன் 22) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாசன் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களவை வேட்பாளராக இருந்த சூரஜ் ரேவண்ணாவின் அண்ணன் பிரஜ்வால் ரேவண்ணாவும், பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மே 31 கைது செய்யப்பட்டார். அவரது தந்தை எச்.டி. ரேவண்ணா கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். சூரஜின் தாயார் பவானி ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்குடன் தொடர்புடைய கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.