தெலுங்கில் பதவியேற்ற தமிழக எம்.பி.!
பதவியேற்ற பின் நன்றி, வணக்கம் என தமிழில் குறிப்பிட்டு ஜெய் தமிழ்நாடு என முழங்கினார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி கே.கோபிநாத் தெலுங்கு மொழியில் பதவியேற்றுக்கொண்டார்.
18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 24) தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாள் அமா்வில் பிரதமா் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள் மக்களவை உறுப்பினா்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
மாநிலங்களின் அகரவரிசையில் உறுதிமொழியேற்க அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் நாளான இன்று, தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.க்கள் பதவியேற்றனர்.
இவர்களில் பலரும் கையில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்திக்கொண்டு உறுதிமொழி எடுத்தனர். அதோடு மட்டுமின்றி திமுக எம்.பி.க்கள் சிலர், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர்களை குறிப்பிட்டு பதவியேற்றனர்.
இதில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற எம்.பி கே.கோபிநாத் தெலுங்கில் பதவியேற்றுக்கொண்டார்.
மேலும், அவர் பதவியேற்ற பின் நன்றி, வணக்கம் என தமிழில் குறிப்பிட்டு ஜெய் தமிழ்நாடு என முழங்கினார்.
தமிழ்நாட்டில் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. தெலுங்கு மொழியில் பதவியேற்றதற்கு பலரும் சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.