நீட் வினாத்தாள் முறைகேடு: மேலும் இருவர் கைது!
கைதானவர்கள் தேசிய தேர்வு முகமையில் நகர ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர்கள்.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மேலும் இருவரை சிபிஐ அதிகாரிகள் இன்று (ஜூன் 28) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தேசிய தேர்வு முகமையில் நகர ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர்கள் எனவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
ஹசாரியாக் நகரில் உள்ள ஒயாசிஸ் பள்ளி முதல்வர் எசான்உல் ஹக், துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இதே மாவட்டத்தில் மேலும் 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக பிகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது.
ஜார்க்கண்ட், குஜராத்,மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றன. இதுதொடர்பாக அந்தந்த மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பதிவான வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக பிகாரில் 2 முக்கிய குற்றவாளிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஹசாரியாக் நகரில் உள்ள ஒயாசிஸ் பள்ளி முதல்வர் எசான்உல் ஹக், துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தேசிய தேர்வு முகமையில் நகர ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.