எதிர்கால பிரதமர் அகிலேஷ் யாதவ்! சமாஜவாதி அலுவலகத்தில் பதாகை!
எதிர்கால பிரதமர் அகிலேஷ் யாதவ் எனக் குறிப்பிட்டு சமாஜவாதி கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகள் வைரல்.
எதிர்கால பிரதமர் அகிலேஷ் யாதவ் எனக் குறிப்பிட்டு சமாஜவாதி கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகள் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 1ஆம் தேதி சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், லக்னெளவில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்திற்கு வெளியேயும் எதிர்கால பிரதமர் எனக் குறிப்பிட்டு அகிலேஷ் யாதவுக்கு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்தது சமாஜவாதி கட்சி. தேர்தலில் இக்கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த முறை 64 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இம்முறை 34 இடங்களில் மட்டுமே வென்றது.
Advertisement
சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கன்னெளஜ் தொகுதியில் போட்டியிட்டு பாஜக எம்.பி.யை 1.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
உத்தரப் பிரதேசத்தில் கிடைத்த வெற்றியை சமாஜவாதி கட்சியின் தொண்டர்கள், கொண்டாடி வருகின்றனர். அதோடு ஜூலை 1ஆம் தேதி அகிலேஷ் யாதவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் எதிர்கால பிரதமர் எனக் குறிப்பிட்டு அவருக்கு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
மேலும் தலைநகர் லக்னெளவிலுள்ள சமாஜவாதி கட்சி அலுவலகத்துக்கு வெளியே எதிர்கால பிரதமர் அகிலேஷ் யாதவ் எனக் குறிப்பிட்டு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா கூட்டணியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியினர் அகிலேஷை பிரதமர் எனக் குறிப்பிட்டு பதாகைகளை எழுதியுள்ளனர்.