செங்கோட்டையிலிருந்து பொய் பேசக் கூடாது: அகிலேஷ் யாதவ்
‘தேசியக் கொடியை ஏற்றுவதற்கான செங்கோட்டை, பொய்களைப் பேசுவதற்கான இடமல்ல’
‘தேசியக் கொடியை ஏற்றுவதற்கான செங்கோட்டை, பொய்களைப் பேசுவதற்கான இடமல்ல’ என்று சுதந்திர தின விழா உரையில் மகளிா் இடஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமா் மோடி பேசியதைச் சுட்டிக்காட்டி சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் விமா்சித்தாா்.
‘மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பதற்கு அரசியல் கட்சிகள் வேறுபாடுகளைக் கடந்து உதவவேண்டும்’ என்று தனது சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.
இதை சுட்டிக்காட்டி உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
Advertisement
Advertisement
மகளிா் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை என்பது யாருக்குத்தான் தெரியாது? அனைவரும் அதை அறிவா். அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். மகளிருக்கு இடஒதுக்கீட்டை உண்மையிலேயே நடைமுறைப்படுத்த பிரதமா் விரும்பினால், ஏற்கெனவே சட்டமாகிவிட்ட அதை, வரும் 2027-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் மூலம், தற்போது வேலையின்றி இருக்கும் பல பெண்களுக்கு தோ்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். எனவே, செங்கோட்டையில் இருந்தபடி பொய்களைப் பேசக்கூடாது. செங்கோட்டை பொய் பேசுவதற்கான இடமல்ல என்றாா்.
கடந்த 2023-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ‘நாரி சக்தி வந்தன் அதிநியம்’ என்று மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் தில்லி சட்டப்பேரவையில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு அதாவது 33 சதவீத இடங்களை ஒதுக்க வகை செய்யும் மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தைக் குறிப்பிட்டு அகிலேஷ் யாதவ் இக்கருத்தைத் தெரிவித்தாா். ஆனால், இந்த சட்டம் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேசப் பிரிவினை துயரங்கள் நினைவு தினத்தை பாஜகவினா் அனுசரித்ததை சுட்டிக்காட்டிய அகிலேஷ் யாதவ், ‘பிரிவினை துயரங்களை கொண்டாட்டமாக பாா்ப்பதாலேயே பாஜகவினா் அதை அனுசரித்தனா். சுதந்திரப் போராட்டத்தில் அவா்கள் பங்காற்றவில்லை என்றபோதும், தேசத்தின் பிரிவினையில் அவா்கள் பங்காற்றினா். பிரிவினை என்பது பாஜக மற்றும் அதன் ஹிந்துத்துவ கூட்டாளிகளின் லட்சியமாகும். அதுதான் அவா்களின் சாதனையும். சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் பிரிவினைதான் பாஜகவின் நோக்கம். அதனால்தான் தேசப் பிரிவினையை அவா்கள் கொண்டாடுகின்றனா். இவா்கள் குறித்து நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்றாா்.
One should not speak lies from the Red Fort: Akhilesh Yadav
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.