முகப்பு
இந்தியா

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

வாக்குச்சாவடிகளில் எவ்வளவு தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள் என்றார் உத்தவ் தாக்கரே.

Updated On : 20 மே 2024, 8:28 pm IST
உத்தவ் தாக்கரே
பகிர்:

வாக்குச்சாவடிகளில் எவ்வளவு தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள் என பொதுமக்களுக்கு மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்துள்ளார்.

கூடுதலாக 12 மணிநேரமானாலும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய பிறகு திரும்ப வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

மும்பையில் பேசிய அவர், ''மும்பை மத்திய தொகுதியின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு தாமதமாகிறது. வாக்குப்பதிவு தாமதாமாகும் பகுதிகளில் சிவசேனைக்கு (உத்தவ் பிரிவு) அதிக வாக்குகள் கிடைப்பதற்காக வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

தேர்தல் ஆணையத்தின் மூலம் நடத்தப்படும் கீழ்த்தரமான விளையாட்டு இது. வாக்காளர்களுக்கு மத்தியில் மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் பாகுபாடு மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது.

தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகளால் குறிப்பிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு தாமதமாகிறது. வாக்காளர்களிடம் பலமுறை வாக்குச்சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இதனால் பெண்கள் மற்றும் முதியவர்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.

தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் பாஜக தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்துகிறது. மோடி அரசுக்கு எதிரான வாக்குகளை குறைப்பதற்கான தந்திரம் இது. வாக்குச்சாவடிகளில் முறைகேடுகளில் ஈடுபடும் தேர்தல் அதிகாரிகளை பொதுமக்கள் விடியோ எடுத்து பதிவிட வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வளவு தாமதமானாலும் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிய பிறகே திரும்ப வேண்டும்'' என அவர் கோரினார்.

இது தொடர்பாக பேசிய மும்பை மாவட்ட ஆட்சியர் சஞ்சய் யாதவ், ''செவ்ரி, சியோன் ஆகிய வாக்குச்சாவடிகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வரிசையில் உள்ளனர். அவர்களுக்காக கூடுதல் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 2,500 கேமராக்கள் மூலம் வாக்குச்சாவடிகளின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதன்படி தேவையான இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மாலை 6 மணிக்கு முன்பு வாக்குச்சாவடிக்கு வந்த மக்களிடம் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு நேரமானாலும் வாக்கு செலுத்த அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்'' எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.