முகப்பு
இந்தியா

‘நீதிகூட பணத்தை சார்ந்துள்ளது’: ராகுல் காந்தி

“பேருந்து, லாரி ஓட்டுநர்கள் தவறுதலாக விபத்து ஏற்படுத்தினால்கூட 10 ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்படுகிறது.”

Updated On : 22 மே 2024, 11:50 am IST
பகிர்:

நீதிகூட பணத்தை சார்ந்ததாக இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி புதன்கிழமை விமர்சித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு இந்தியாவை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

புணேவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மதுபோதையில் 17 வயது சிறுவன் அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விவகாரத்தில் இரண்டு இளம் ஐடி பொறியாளர்கள் பலியாகினர்.

ஆனால், விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு மிக எளிய நிபந்தனைகளுடன் அன்றைய தினமே ஜாமீன் கிடைத்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இந்த விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் “இரண்டு இந்தியாவை உருவாக்கி வருகிறார் மோடி - நீதிகூட பணத்தை சார்ந்துள்ளது” என்று பதிவிட்டு ஒரு காணொலியை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது:

“பேருந்து, லாரி, ஆட்டோ, ஓலா, யூபர் ஓட்டுநர்கள் தவறுதலாக விபத்தை ஏற்படுத்தி ஒருவர் உயிரிழக்க நேரிட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

ஆனால், பணக்கார வீட்டு குழந்தை மதுபோதையில் காரை இயக்கி இருவரை கொலை செய்ததற்கு கட்டுரை எழுதுவது தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் தனித்தனியே இரு இந்தியா உருவாக்கப்படுகிறதா என்று மோடியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அனைத்து மக்களையும் ஏழைகளாக்க வேண்டுமா” என்று பதிலளித்தார்.

ஆனால், கேள்வி நீதியைப் பற்றியது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும். இந்த அநீதிக்கு எதிராகதான் நாம் போராடிக் கொண்டுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை தொழிலதிபர் விஷால் அகர்வால். சிறுவனை கைது செய்த காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பிரியாணி, பர்கர், பீசா போன்ற வகைவகையான உணவுகளை வாங்கிக் கொடுத்துள்ளனர். இந்த காணொலிகள் இணையத்தில் வைரலானது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நிபந்தனைகளுடன் ஜாமீனும் கொடுக்கப்பட்டது. நிபந்தனைகளாக சாலை விபத்து குறித்து 300 பக்க கட்டுரை, சிறுவருக்கு ஆலோசனை போன்றவை விதிக்கப்பட்டது கடும் விவாதத்துக்கு உள்ளானது.

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், சிறுவனின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து 48 மணிநேரத்துக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

சிறுவனுக்கு மதுபானம் அளித்த இரண்டு பார்களும் சீல் வைக்கப்பட்டு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments