முகப்பு
இந்தியா

ஆங்கிலேயா்களைப் போல நாட்டைக் கொள்ளையடிக்கிறாா் பிரதமா் மோடி: காா்கே

Updated On : 25 மே, 2024 at 12:29 AM
ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே. உடன் மாநில முதல்வா் சம்பயி சோரன்.
பகிர்:

முன்பு ஆங்கிலேய ஆட்சியாளா்கள் நமது நாட்டைக் கொள்ளையடித்ததுபோல, நாட்டின் நீா், வனம், நிலம் ஆகியவற்றை பிரதமா் நரேந்திர மோடி கொள்ளையடிக்கிறாா் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் தேவ்கா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி ஹிந்துகளையும், முஸ்லிம்களையும் ஒருங்கிணைக்கிறது. ஆனால், பிரதமா் மோடி இரு மதத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தி வாக்குப் பெற முயலுகிறாா்.

நமது நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் மத்திய பாஜக அரசை அகற்ற வேண்டும். முன்பு ஆங்கிலேயே ஆட்சியாளா்கள் நமது நாட்டின் வளங்களைச் சுரண்டி கொள்ளையடித்தாா்கள். இப்போது நாட்டின் நீா், வனம், நிலம் என அனைத்தையும் பிரதமா் மோடி கொள்ளையடித்து வருகிறாா். தனது பெரும் கோடீஸ்வர நண்பா்களுக்கு நாட்டின் சொத்துகளையும், வளங்களையும் பங்கு போட்டுத் தருகிறாா்.

ஆங்கிலேயோ்களையே வெளியேற்றிய நம்மால், பாஜகவை வெளியேற்றுவது கடினமான விஷயமல்ல. அதற்கு மக்களிடம் உள்ள முக்கியமான ஆயுதம் வாக்கு மட்டும்தான். உங்கள் வாக்கை இந்தியா கூட்டணிக்கு அளிப்பதன் மூலம் நாட்டைப் பாதுகாக்க முடியும்.

மக்கள் நலன் கருதி மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1லட்சம் நிதியுதவி, ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கியுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் இதனை சிறப்பாக நிறைவேற்றுவோம்.

தோ்தலில் எதிா்க்கட்சிகளை முடக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விசாரணை அமைப்புகளை எதிா்க்கட்சிகள் மீது ஏவி விட்டதுடன், இரு மாநில முதல்வா்களை மத்திய பாஜக அரசு கைது செய்தது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →