உத்தரப் பிரதேசத்தில் துணை ஆய்வாளரைத் தாக்கி, சீருடையைக் கிழித்த வழக்கில் பாஜக தலைவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாலாஜிபுரம் நெடுஞ்சாலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சந்திப்பில் இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் துணை ஆய்வாளர் சேத்தன் பரத்வாஜ் மற்றும் ஒரு காவலரிடம் பாஜக தலைவர் தினேஷ் குமார், துணை ஆய்வாளர் பரத்வாஜிடம் சீருடையின் காலரைப் பிடித்து தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் கூறுகையில், ”பாலாஜிபுரம் வார்டு கவுன்சிலரின் கணவரான தினேஷ் குமாரின் மோட்டார் சைக்கிள் மீது நீரஜ் என்ற நபரின் கார் மோதியுள்ளது. இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதல் முற்றியது. தகவல் கிடைத்ததும், பரத்வாஜ் மற்றும் காவலர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, தினேஷ் குமாரும் அவரது உதவியாளர்களும் துணை ஆய்வாளரின் சீருடை காலரை பிடித்து தாக்கியுள்ளனர்” என்றார்.
பின்னர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் போலீஸ் படையுடன் சம்பவ இடத்திற்கு வந்து, பாஜக தலைவர் மற்றும் அவரது மூன்று உதவியாளர்களை கைது செய்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிந்த பிறகு, வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.